ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேனவே, அரிசி மாபியாவின் முக்கிய நபராவார்: நாமல் தெரிவிப்பு

🕔 October 25, 2017

ற்போதைய அரசாங்கத்தில் அரிசித் தட்டுப்பாடு நிலவுவதற்கு அரிசி மாபியாவே பிரதான காரணமாகும் என்று தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ; ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேனவே, இந்த அரசி மாபியாவின் முக்கிய நபராவார் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

எங்கள் அட்சிக் காலத்தில் நெல் உற்பத்தி தன்னிறைவடைந்திருந்த போதும், இந்த அரசாங்கத்தின் அரிசி மாபியா நடவடிக்கையினால் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்யும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“எமது ஆட்சிக் காலத்தில் பல விடயங்களை சிறந்த முறையில், முறையான திட்டமிடல்களோடு செய்தோம். ஆனால் அவற்றை இவ்வரசாங்கம் பேணிக்கொள்ளவில்லை. அவற்றில் ஒன்றாக நெல் விவசாயத்தை சுட்டிக்காட்டலாம். எமது ஆட்சிக் காலத்தில் நெல் உற்பத்தியானது தன்னிறைவடைந்திருந்தது.

மேலதிகமாக செய்கை பண்ணப்பட்ட நெல்லை என்ன செய்வது என்று நாம் சிந்திந்தோம். கோதுமை மாவின் பயன்பாட்டை குறைத்து அரிசி மாவின் பயன்பாட்டை கூட்டி, அதிக நெல் விளைச்சலை எதிர்கொள்ள திட்டங்களை அமுல்படுத்தி இருந்தோம். அரசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் உத்தேசித்திருந்தோம்.

ஆனால், இந்த அரசாங்கத்தின் காலத்தில் அரிசித் தட்டுப்பாடு நிலவுவதற்கு இன்னுமொரு பிரதான காரணமும் உள்ளது. தற்போதைய ஜனாதிபதியின் சகோதரர் டட்லி சிறிசேனவே அரிசி மாபியாவின் முக்கிய நபராவார். இதனை நான் மாத்திரம் சொல்லவில்லை. எமது ஆட்சி காலப்பகுதியில் எம்மை விமர்சித்த தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தெரிவித்திருந்தார். ஜே.வி.பி.யும் இதனைக் கூறியிருந்தது.

இவர்கள் உள்நாட்டு அரிசிகளை வாங்கி பதுக்கி வைப்பார்கள். வெளிநாட்டு அரிசிகளை குறைந்த விலையில் அரசாங்கத்தினூடாக இறக்குமதி செய்வார்கள். பின்னர் இரண்டையும் ஒன்றாக கலந்து உள்நாட்டு அரிசியாக கூடிய விலைக்கு விற்பனை செய்வார்கள். எமது ஆட்சிக் காலத்திலும் இப்படியான செயற்பாடுகள் இடம்பெற்றன. இந்த அரிசி மாபியா செயல்தான், வரலாற்றில் என்றுமில்லாதவாறு கூடுதலான அரிசியை இறக்குமதி செய்ய காரணமாகும். அன்று அவற்றுக்கு நாம் இடம் கொடுக்கவில்லை. இப்போது நாங்கள் இடம்கொடுக்கத் தேவையில்லை. அவர்களே எடுத்துக் கொள்ளலாம்.

இந்த அரசாங்கமானது அரிசி தட்டுப்பாட்டை நீக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. வெளிநாடுகளுக்கு உழைத்துக் கொடுப்பதிலும் தாங்கள் உழைத்துக் கொள்வதிலும்  அரசாங்கத்திலுள்ளவர்களுக்கு அப்படி பிரியமாகும். இதற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குற்றம் சுமத்தினாலும் சுமத்துவார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – விவசாயிகளுக்கு முன்னுரிமைகொடுத்து தனது செயற்பாட்டை அமைத்திருந்ததால் சிறந்த விளைச்சல் கிடைத்தது. இவ் ஆட்சியாளர்களால் அப்படியான சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்க முடியவில்லை. நாம் அரிசி மாபியாவுக்கு இடமளித்திருக்கவில்லை. விவசாயிகளின் வீழ்ச்சிக்கு ஜனாதிபதியும் இந்தஅரசாங்கமுமே காரணம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்