சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரை, அரசியல்வாதிகளைப் புறக்கணிப்பது என, பள்ளிவாசல் தலைமையில் தீர்மானம்

🕔 October 25, 2017

– அஸ்லம் எஸ். மௌலானா, எம்.வை. அமீர், யூ.கே. காலீத்தீன் –

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபை கிடைக்கும்வரை அரசியல்வாதிகளையும் கட்சிகளையும் புறக்கணிப்பது என சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனீபா தலைமையில்கூடிய, மரைக்காயர் சபையினர்,பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள்  மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

நேற்று செவ்வாய்கிழமை மாலை இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாய்ந்தமருது உள்ளுராட்சிசபையை கோரி  சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில் பல்வேறு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் பிரதமர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் குறித்த உள்ளுராட்சி சபையைப் பெற்றுத் தருவதாக பகிரங்க வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். ஆயினும் அந்தக் கோரிக்கையை கிடப்பில் போடுவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருகட்டமாகவே சபையைக் கோரும் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாது, எந்த கோரிக்கைகளையும் முன்வைக்காத ஏனைய ஊர்களை இணைத்து, விடயத்தைச் சிக்கலாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று, தீர்மானத்தை நிறைவேற்றியோர் தெரிவித்தனர்.

அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு;

– சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை விடயமாக செவ்வாய்க்கிழமை (24) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பில், கல்முனை மாநகர சபையை நான்காக பிரிப்பது எனவும் அதற்காக பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் குழுவொன்றை அமைப்பது எனவும் எடுக்கப்பட்ட தீர்மானமானது, சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை கோரிக்கையை மழுங்கடித்து, தடுப்பதற்கான செயற்பாடாக நாம் கருதுவதுடன் அதனை முற்றாக நிராகரிக்கின்றோம்.

– பிரதமர்  தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கும், சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சி சபையை ஏற்படுத்துவதற்குமிடையில் எந்தவிதத் தொடர்புமில்லை என்பதை உறுதியாக அறிவிக்கின்றோம்.

– இத்தீர்மானமானது பிரதமர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயலாகும்.

– இவை தொடர்பாக மொத்தமாக 40 கூட்டங்கள் பல்வேறு தரப்புடனும் நடத்தப்பட்டு முடிவடைந்திருக்கின்ற நிலையில், மீண்டுமொரு குழு நியமிக்கப்படுவதென்பது சாய்ந்தமருது மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற நினைக்கும் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டாகுமென கருதுகின்றோம்.

– சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபையை வழங்குவதில் பிரத்தியோகமான எல்லைப்பிரச்சினைகளோ, இனக்கலப்போ இல்லாமையால் ஏற்கனவே வாக்குறுதியளித்தற்கிணங்க, அதனை உடனடியாகப் பிரகடனம் செய்யுமாறு வேண்டுகின்றோம். அதுவரை எமது போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.

– அவ்வாறு பிரகடனம் செய்யப்படா விட்டால் அரசியல் ரீதியாக எந்தக் கட்சியோ, அரசியல்வாதிகளோ தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு எவ்வித ஒத்துழைப்புகளும் வழங்கப்படாது என்பதுடன், அவர்களும் அவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்ந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

– இதற்காக பொது மக்கள் அனைவரும் தமது அரசியல், கொள்கை வேறுபாடுகளை மறந்து எதிர்காலத்தில் எங்களால் மேற்கொள்ளப்பட இருக்கின்ற தீர்மானக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

– இக்கோரிக்கையை தொடர்ந்து இழுத்தடிப்பதானது கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய இரண்டு ஊர்களுக்குமிடையில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துமெனஅரசியல்வாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

இத்தீர்மானங்கள் அனைத்தும் நிகழ்வில் பங்கேற்றோரால் அல்லாஹ் அக்பர் எனும் கோஷத்துடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்