உத்தேச அரசியலமைப்பை கண்டு, அச்சப்படும் பௌத்த தேசியம்  

🕔 October 23, 2017

 

– ஏ.எல். நிப்றாஸ் –

சிறுபிள்ளைகள் இருக்கின்ற சில வீடுகளில் அந்தப் பிள்ளைகளை வீட்டிலுள்ளவர்கள் நன்றாக ஓடி விளையாட அனுமதித்திருப்பார்கள். ஆனால், கதவை அல்லது வாயிலைத் தாண்டி வெளியில் சென்று விடாதபடி ஒரு பலகையால் தடுப்பு போட்டிருப்பார்கள். பிள்ளைகள் தங்களுக்கு சுதந்திரம் கிடைத்திருப்பதாக என்னதான் துள்ளிக் குதித்;து விளையாடினாலும் ஒரு எல்லைக்கு அப்பால் போக முடியாது. அவர்கள் அந்த தடுப்புப் பலகையில் முட்டிமோதி மீளத் திரும்புகின்ற போதே, தமது சுதந்திரத்திற்கு எல்லையிடப்பட்டுள்ளதை உணர்ந்து கொள்வார்கள்.

அதுபோல, சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு பெருமளவிலான சுதந்திரங்களும் உரிமைகளும் வழங்கப்பட்டிருந்தாலும், அவற்றுக்கு ஒரு எல்லைபோடும் ஏற்பாடுகளையும் பெருந்தேசியமே செய்துவைத்திருப்பதையும் காண முடிகின்றது. அந்தவகையில் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் அபிலாஷகளை நிறைவேற்றுவது போல ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கிவிட்டு, ஒரு எல்லைக்கு அப்பால் சென்றுவிடாதபடி தடுப்பதற்கான காய்நகர்த்தல்களையும் பெருந்தேசியமே மேற்கொள்கின்றதோ என்ற ஒரு ஐயப்பாடு இன்னுமொரு தடவை மேலெழுந்திருக்கின்றது.

அரசியல் நோக்கர்களின் கருத்துப்படி, இலங்கையின் பெருந்தேசியமானது ஒரே காலத்தில் இரண்டு சக்திகளோடு இணக்கப்பாட்டுடன் நடந்துகொண்டது மிகக் குறைவாகும். ஒன்றுடன்; உறவை வைத்துக் கொண்டு இன்னுமொரு தரப்பை கணக்குத் தீர்க்கின்ற ஒரு இராஜதந்திரத்தையே கடைப்பிடித்து வந்திருக்கின்றது. கலவரங்கள் தொடங்கி யுத்தம் வரையில் இந்த உத்தி வெகுவாக பிரயோகிப்பட்டிருப்பதாக கருத முடியும். இதில் மிகவும் சிறிய உத்திதான், ‘இதோ நீங்கள் கேட்பதை தருவதற்கு தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அவர்கள் தடுக்கின்றார்கள், இவர்கள் விரும்புகின்றார்கள் இல்லைஎன்று அதனை எதிர்பார்த்துக் காத்திருப்போரிடமே திருப்பிக் கேட்கும் மூலோபாயம் எனலாம்.

பீடங்களின் அறிவிப்பு

இலங்கையில் இனப் பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க எத்தனிக்கின்ற போது அல்லது தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதத்தை, முஸ்லிம்களுக்கு ஒரு உரிமையை வழங்க முற்படுகின்ற போது, ‘இதோ கடும்போக்கு பெரும்பான்மை சக்திகள் எதிர்க்கின்றதுஎன்று சிறுபான்மையினரிடம், இதோமற்றைய சிறுபான்மையினம் தடுக்கின்றதுஎன்று தமிழ், முஸ்லிம் மக்களிடமும் காரணம் கூறி, அந்த தீர்வை, வரப்பிரசாதத்தை வழங்காமலே விட்டுவிடுகின்ற நகர்வுகளை வரலாற்றில் நாம் அனுபவமாக பெற்றிருக்கின்றோம். தொட்டிலை ஆட்டுவதுபோல ஆட்டிவிட்டு நேரம்பார்த்து பிள்ளையையும் சீண்டிவிடுகின்ற வேலை என்றும் இதைச் சிலர் சொல்வதுண்டு.

தற்போது, இலங்கையில் இனப் பிரச்சினைக்கானக்கான தீர்வை முன்வைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்கான அடிப்படை ஏற்பாடாக புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கிடையில் அரசியலமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையும் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கி;ன்றது. இந்நிலையில், கூட்டு எதிரணி போன்ற தரப்பினர் வெளிப்படுத்தி வருகின்ற பகிரங்க எதிர்ப்பும், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் சாரக மகா சங்க சபையினர் வெளியிட்டுள்ள ஆட்சேபனையும், கட்டுரையில் மேலே குறிப்பிட்ட விதத்திலான ராஜதந்திர உத்திகளை ஒரு கணம் ஞாபகப்படுத்துகின்றன.

மூன்று மாதங்களுக்கு முன்னரே அதாவது கடந்த ஜூலையில், பௌத்த உயர் பீடங்களான மல்வத்து, அஸ்கிரிய மற்றும் அமரபுர நிகாயக்களின் மகாநாக்கர்கள்நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியமற்றதுஎன்று தீர்மானித்திருந்தனர். இது இவ்வாறிருக்க, இப்போது மீண்டும் மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் அனுநாயக்க தேரர்கள் தலைமையிலான காரக மகா சங்க சபையினர், ‘புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பில் திருத்தங்களோ தேவையில்லைஎன்று அறிவித்திருக்கின்றன.

இதற்காக அவர்கள் கூறியுள்ள காரணங்களை வைத்துப் பார்க்கின்ற போது, சிறுபான்மையினருக்கு தீர்வு வழங்குவதில் பெரும்பான்மை சமூகத்திற்கு வழக்கமாக இருக்கின்ற அச்ச மனநிலை, அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் நாடு பிரிக்கப்பட்டு விடுமோ என்ற கிலி ஏற்பட்டிருப்பதை உய்த்தறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கி;ன்றது.

அரசியலமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ள ஒரு காலசூழலில் இம்மாதம் 17ஆம் திகதி கண்;டி தலதா மாளிகையில் ஒன்றுகூடிய மேற்படி இரண்டு முக்கிய பீடங்களின் காரக மகா சங்க சபையினர் சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். அதாவது, தற்போதிருக்கின்ற அரசியலமைப்பே இலங்கைக்கு பொருத்தமானது என்பதுடன் உத்தேச அரசியலமைப்பு பொருத்தமற்றதும் ஆகும். இது ஒற்றையாட்சி (‘யுனிட்டரி ஸ்டேட்‘) என்ற கோட்பாட்டுக்கு பாதகமானது என்பதுடன்,  அதிலுள்ள அதிகாரப் பகிர்வு என்றவிடயம் நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் உத்தேச அரசியலமைப்பில் உள்ள மாகாண சபைகளுக்கும் பிரதேச சபைகளுக்கும் அதிகாரங்களை குறித்தொதுக்குதலும் பொருத்தமற்ற முறையாகும். எனவே, புதிய அரசியலமைப்போ அல்லது தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் திருத்தங்களோ தேவையில்லை. இதனை மகா சங்கம் எதிர்க்கும். இதனை தயாரிககும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் என்று அனுநாயக்க தேரர்கள் தலைமையிலான சபையினர் கோரியுள்ளனர்.  

பிரதமரின் விமர்சனம்

இதற்கு மறுநாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்கு சாடைமாடையாக பதிலளிக்கும் பாங்கிலான கருத்தை வெளியிட்டுள்ளார். ‘ஊடகங்கள் அரசியலமைப்பு தொடர்பில் மக்களை பிழையாக வழிநடாத்துவதாகஅவர் குறிப்பிட்டுள்ளார். மல்வத்து மகாநாயக்க தேரர் நாட்டில் இல்லாத நிலையில் அவரதும் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். அத்துடன் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் இன்னும் நிறைவடைந்து விடவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் ஊடகங்களை குற்றம்சாட்டியுள்ள பிரதமர், அனுநாயக்க தேரர்கள் குறிப்பிட்ட கருத்து தவறானது என்றோ அல்லது அவ்வாறு ஒரு தீர்மானம் காரக சபையில் எடுக்கப்படவில்லை, எடுக்கப்படாது என்றோ கூறவில்லை. அத்துடன் இந்தக் கட்டுரை எழுதப்படும் வரைக்கும் அந்தச் செய்தி தவறானது என்று அனுநாயக்க தேரர்கள் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. மாறாக, இந்த தீர்மானத்திற்கு மகா நாயக்க தேரர்களின் ஆசீர்வாதமும் இருக்கின்றது என்றே அஸ்கிரிய பீடத்தின் பிரதம செயலாளர் தெரிவித்திருக்கின்றார். அதுமட்டுமன்றி, பௌத்த பீடங்களோ அல்லது சாரக சங்க சபைகளோ இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்காது என்று யாரும் கூறவும் முடியாது.

ஏனெனில், கடந்த ஜூலை 4ஆம் திகதி ஒன்றுகூடிய மூன்று பௌத்தபீடங்களின் மகாநாயக்க தேரர்கள் புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியமில்லை என்; நிலைப்பாட்டை எடுத்திருந்தனர். இவ்விடயம் செய்தியாக வெளியிடப்பட்ட இரு தினங்களுக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டிக்கு சென்று மகாநாயக்கர்களை சந்தித்து அரசியலமைப்பு தொடர்பான சில தெளிவுபடுத்தல்களை மேற்கொண்டிருந்தார். இப்போது, பிரதமரும் அவ்வாறே பௌத்த பீடங்களை சாடாமலேயே ஊடகங்களை குற்றம் சாட்டியிருக்கின்றார்.

இந்த யதார்த்தத்தை தமிழர்களும் முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது இருக்கின்ற 1978ஆம் ஆண்டின் 2ஆம் குடியரசு அரசியலமைப்பிலும் உத்தேச அரசியலமைப்பிலும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் பௌத்த உயர்பீடங்களை மீறிச் செயற்படுதல் என்பது சாத்தியமற்றது. ஒன்றிணைந்த எதிரணியும், சிங்கள செயற்பாட்டாளர்கள் சிலரும் புதிய அரசியலமைப்பை தமிழர்களுக்கு சார்பானதாக பார்க்கின்ற ஒரு பின்புலத்தில் பௌத்தபீடங்கள் என்னசொன்னாலும் நாங்கள் புதிய அரசியலமைப்பை கொண்டு வந்தே தீருவோம் என்று எந்த ஆட்சியாளராலும் சொல்ல முடியாது.

ஆரம்பத்தில் புதிய அரசியலமைப்பை வரவேற்ற சிங்கள பெருந்தேசியவாதிகள் பின்னர் அதனை மேலோட்டமாக ஆட்சேபிக்கத் தொடங்கினர். கிட்டத்தட்ட பௌத்தபீடங்களும் ஜூலையில் மேலோட்டமான ஒரு அறிவிப்பையே வெளியிட்டிருந்தன. ஆனால், இப்போது இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளமையால் அதில் உள்ள உள்ளடக்கங்களை கூர்;ந்து கவனித்துத பின்னரே, பௌத்த தேசியம் நிலைப்பாடுகளை எடுக்கும் என அனுமானிக்க முடிகின்றது.

முஸ்லிம்களின் நிலை

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், இன்றுவரையும் உத்தேச அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றி மட்டுமே ஆழமான கலந்துரையாடல்களையும் எதிர்ப்பையும் மேற்கொண்டு வருகின்றனர். இவ்விணைப்புக்கு எதிர்த்தால் போதும் என்றும், இணைப்பு இல்லாத அரசியலமைப்பால் நமக்குப் பிரச்சினை இல்லை என்றும் முஸ்லிம்கள் எண்ணுவது போல தெரிகின்றது.

புதிதாக திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்ற ஆட்சி, பதவி நீடிப்பு போன்ற ஆசைகளைக் காட்டியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெறுவதற்காகவும் தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்ற நியாயத்தின் அடிப்படையிலும் அரசாங்கம் புதிய அரசியலமைப்பை முன்வைக்க முற்படுகின்றது. எனவே தமிழர்கள் நூறுவீதம் ஆதரிப்பார்கள். கடும்போக்கு சிங்கள பௌத்த தேசியம் இதனை பகிரங்கமாகவே எதிர்க்கும். இன்றைய ஆட்சிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற  மென்போக்கு பௌத்த தேசியம் வெளியில் ஆதரவையும் மறைமுகமாக அதற்கெதிரான காய்நகர்த்தல்களையும் மேற்கொள்ளும் வாய்ப்பிருக்கின்றது.  

பௌத்த தேசியம் இடைக்கால அறிக்கையில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ள சமஷ்டி, அதிகாரப் பகிர்வு, யுனிட்டரி ஸ்டேட் அல்லது ஒருமித்த நாடு என்ற சொற்பதங்கள் குறித்தெல்லாம் ஆராய்ந்து வருகின்றது என்பதை, காரக சங்க சபாவின் மிகப் பிந்திய அறிக்கையில் இருந்து அனுமானிக்க முடிகின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம்கள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது. முஸ்லிம் கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகளை எந்த முஸ்லிம்  பொதுமகனும் முழுமையாக நம்பத் தேவையில்லை.  

மிக முக்கியமாக, தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்று கிடப்பதற்கு முஸ்லிம்கள் எவ்விதத்திலும் தடையாக நிற்கக் கூடாது. முஸ்லிம்களை பாவித்து தீர்வு திட்டத்தை குழப்ப யாராவது முயற்சி செய்தால்  அதற்கு இரையாகிவிடவும் கூடாது. ஆயினும்,  படிப்பறிவும் எழுத்தறிவும் உள்ள முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி மட்டுமல்லாமல் இடைக்கால அறிக்கையில் உள்ளடங்கியுள்ள மேற்குறிப்பிட்டுள்ளவை போன்ற ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் ஆழமாக ஆய்ந்தறிந்து நிலைப்பாடுகளை எடுக்க வேண்டியிருக்கின்றது. அதனை விளங்கிக் கொண்டே தமிழர்கள் ஆதரிக்கின்றனர், சிங்கள தேசியம் எதிர்க்கத் தலைப்படுகின்றது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

பொருள் விளக்கம்

ஒற்றையாட்சி என்பது அதிகாரங்கள் ஒரே இடத்தில் குவிந்துள்ள ஒரு ஆட்சி முறையாகவும். அதாவது மாநிலங்களின் அதிகாரத்தை மிகைத்ததாக மத்திய அரசாங்கத்தின் (பாராளுமன்றத்தின்) அதிகாரம் இருக்கின்ற நிலையாகும். சுமஷ்டி என்பது மத்திக்கும் மாநிலத்திற்கும் இடையில் இறைமை பகிரப்படுகின்ற ஒரு நிலைமையாகும். மாநில அரசாங்கத்தின் சட்டவாக்கம் போன்ற அதிகாரங்களை மாகாணங்களுக்கு கொடுத்தலாகும். அதாவது, ‘சப்ஸ்டான்டடிங் வரையறைகளைநடைமுறைப்படுத்தல் என்று கூறலாம். அதன்படி மாகாண சபையின் அனுமதியின்றி பாராளுமன்றம் சம்பந்தப்பட்ட விடயங்களை மாற்ற முடியாது போகும்.

சிங்கள சமூகம் எப்போதும் ஒற்றையாட்சியையே விரும்பியிருக்கின்றது. இந்நிலையில் வெளியாகியுள்ள இடைக்கால அறிக்கையில், ‘தெற்கில் உள்ள (சிங்கள) மக்கள் பெடரல் (சமஷ்டி) என்ற சொல் தொடர்பிலும் வடக்கில் உள்ள (தமிழ்) மக்கள்யுனிற்றரிஎன்ற பதம் தொடர்பிலும் அச்சமடைந்துள்ளனர்என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தமிழ் இடைக்கால அறிக்கையில்ஒருமித்த நாடுஎன்றும், சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் ஏகிய ராஜிய என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு அர்த்தத்தையும் முகத்தையும் காட்டும் முயற்சியா என்று வை.எல்.எஸ்.ஹமீட் போன்ற முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதில் ஏகிய ராஜிய என்ற சொல் சிங்களத்தில் ஒற்றையாட்சி என அர்த்தப்படுகின்றது. அதன்படி சமஷ்டி என்றால் நாடு பிரிந்துவிடும் என நினைக்கும் சிங்கள மக்களை சூசமாக திருப்திப்படுத்த முயற்சிக்கப்படுவதாக தெரிகின்றது. மறுபுறுத்தில், தமிழில் இது ஒருமித்த நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருமித்த நாடு என்பதையும் ஒரு நாடு (ஒற்றையாட்சி) என்பதையும் ஆழமாக நோக்கும் போது வேறுபடுவது நமக்கு தெரியும். எனவே, இது தமிழர்களை திருப்திப்படுத்துவதற்கான முயற்சியாக இருக்கலாம்.  அதுபோல, எந்த ஆங்கில சொல்லைப் போட்டாலும் சர்வதேச சமூகம் பிடித்துக் கொள்ளும் என்பதால் ஏகிய ராஜிய என்ற சிங்களப் பதமே ஆங்கில அறிக்கையிலும் போடப்பட்டுள்ளது.

இந்தப் பின்புலத்தில் முஸ்லிம் சமஷ்டி ஒன்றுக்கான உத்தரவாதங்கள் இல்லாத சூழலில், சமஷ்டி அடிப்படையில் தீர்வு முன்வைக்கப்பட்டால் முஸ்லிம்கள் எந்த மாநிலத்திலும் நிலத்தொடர்புடனும் பெரும்பான்மையாகவும் வாழாத காரணத்தால் அதன் நன்மைகள் பெருமளவுக்கு கிடைக்காது போகும் என்று முஸ்லிம் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். மாறாக, அந்தந்த பிராந்திய ஆட்சியாளர்களின் கீழ் அடக்கியாளப்படும் நிலைமையே ஏற்படும் என்பது அவர்களது அபிப்பிராயமாகும்.

அதேபோன்று அதிகாரப் பகிர்வு ஒரு நல்ல கோட்பாடு என்றாலும் இலங்கையின் தற்போதைய நிலைமைகளில் புதிய தேர்தல் முறைமையின் கீழ் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவடையும் வாய்ப்புள்ளது. இப்போது, ஒரு ஜனாதிபதியின் கீழ் 21 எம்.பி.க்கள் இருந்தே பலவற்றை செய்ய முடியாதிருக்கின்ற போது, முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் குறைவாக காணப்படும் சூழலில் பேரம் பேச முடியாமல், ஒரு ஜனாதிபதியிடமே சாதிக்க முடியாத விடயங்களை (அதிகாரப் பகிர்வின்படி அமையப் பெறும்) ஏகப்பட்ட மாகாண (சமஷ்டி) ஆட்சியாளர்களிடம் முஸ்லிம்கள் சாதிப்பது பெரும் சிரமமாக அமையும்.  

சமஷ்டியை சமஷ்டி என்ற பெயரில் கொடுக்காமல், மாநிலமத்திய அரசுகளின் அதிகாரங்களை மாற்றியமைத்தல் போன்ற நுட்பமான முறையிலும் அதன் பண்பை உருவாக்கி விட முடியும் என்று விடயமறிந்தோர் கூறுகின்றனர். இந்த சமஷ்டியால் ஒன்றுபட்ட நாடுகளும் உள்ளன பிரிந்து சென்ற நாடுகளும் உள்ளன என்று உலக சரித்திரம் கூறுகின்றது. சுயநிர்ணயம் என்ற விடயமே இங்கு தீர்மானிக்கும் கருவியாக அமைகின்றது.

சுயநிர்ணயமும் நாமும்

ஒரு சமூகம் தனது அரசியல் அந்தஸ்தை தீர்மானித்தல் சுயநிர்ணயம் என்று வரையறை செய்யப்படுகின்றது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (.சி.சி.பி.ஆர்), ஒரு தேசியத்துக்கு அரசாங்கம் அதனது சுயநிர்ணய உரிமையை வழங்க வேண்டும் எனச் சொல்கின்றது. இந்நிலையில் உலகில் சமஷ்டியைப் பெற்ற பிராந்திய அரசின் செயற்பாடுகளில், அந்த நாட்டின் மத்திய அரசு தலையீடு செய்யுமாயின் பிராந்திய அரசாங்கமானது தமது சுயநிர்ணயத்தை அனுபவிக்க தடையாக இருக்கின்றது என்ற கோஷத்தை முன்னிறுத்தும். இது முரண்பாடாக வலுவடையலாம் என்பதுடன், இவ்வாறான பின்னணியில் சில மாநிலங்கள் வெளிநாடுகளின் ஆசீர்வாதத்துடன் தனிநாடாகிய வரலாறுகள் நிறையவே உள்ளன.

எனவேதான், இவ்விடயங்களை எல்லாம் கவனத்திற்கொண்டே பௌத்த தேசியம் புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக சொல்ல முடியும். அதிகாரப் பகிர்வு, யுனிட்டறி ஸ்டேட் பற்றியெல்லாம் காரக சபையினர் அறிவித்துள்ளமை அதை உறுதிப்படுத்திக் கொள்ள போதுமானதும் ஆகும்.

புதிய அரசியலமைப்பை எதிர்க்கும் தமது தீர்மானத்திற்கு மகாநாயக்கர்களின் ஆசீர்வாதமும் உண்டு என்று, பிரதமரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அஸ்கிரிய பீடத்தின் பிரதம செயலாளர் கூறியுள்ள நிலையில், மகா சங்கத்தினரையும்  பௌத்த பீடங்களையும் பகைத்துக் கொண்டு சிங்களத் தீவின் ஜனாதிபதியாலோ பிரதமராலோ செயற்பட முடியாது என்பதே யதார்த்தமாகும். ஆனால், தமிழர்களுக்கு தீர்வு வழங்காமல் இன்னும் காலத்தை இழுத்தடிக்க முடியாது என்பதையும் அரசாங்கம் பட்டறிந்து இருக்கின்றது.

ஆகவே, உத்தேச அரசியலமைப்பை தமிழர்கள் ஆதரிப்பதும் சிங்கள பெருந்தேசிய சக்திகளில் ஒரு பகுதியினர் எதிர்ப்பதும் அவரவர்களின் சமூக நலன்சார்ந்தே அன்றி வேறு எதற்காகவும் அல்ல. அந்த வகையில் முஸ்லிம்களும் இடைக்கால அறிக்கையில் உள்ள அதிகாரப் பகிர்வு, ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு, வடக்கு,கிழக்கு இணைப்பு மற்றும் இதன்மூலம் சமஷ்டிக்கான சாத்தியப்பாடு என்பவை பற்றியெல்லாம் ஆழமாக அலசி ஆராய்ந்து நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகம் விளையாட்டுத்தனமாக இருக்க முடியாது.

நன்றி: வீரகேசரி (22.10.2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்