ஏ.ரி.எம். அட்டை ‘கால்களை வாரியதால்’, பிச்சை எடுத்த ரஷ்ய பயணி
தனது ஏ.ரி.எம். அட்டை மூலம் பணம் பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியொருவர் பிச்சை எடுத்த சம்பவமொன்று இந்தியா – காஞ்சிபுரம் பகுதியில் இடம்பெற்றது.
ரஷ்யாவைச் சேர்ந்த 24 வயதுடைய ஏ. எவன்ஜலின் என்பவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய ஏ.ரி.எம். அட்டை மூலம் பணத்தினைப் பெற்றுக் கொள்ள முடியாததொரு நிலைவரம் குறித்த நபருக்கு ஏற்பட்டுள்ளது. கையில் பணமும் இருக்கவில்லை.
இதனையடுத்து, பிச்சை எடுப்பதற்குத் தீர்மானித்த அந்த நபர், காஞ்சிபுரத்திலுள்ள குமரக்கோட்டம் கோயிலுக்கு வெளியில் உட்கார்ந்து பிச்சை எடுக்கத் தொடங்கினார்.
இந்த நிலையில், இவர் பற்றிய செய்தியறிந்த பொலிஸார், குறித்த நபரின் கடவுச் சீட்டு மற்றும் வீசா ஆகியவற்றினை சரி பார்த்த பின்னர், அவருக்கு சென்னை செல்வதற்கு பணம் கொடுத்து அனுப்பியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.