கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகரம்; துபாய், பஹ்ரைன் போல் திகழும்: ஹக்கீம் தலைமையிலான கூட்டத்தில் தெரிவிப்பு

🕔 August 4, 2017

ல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப் படுத்தும்போது, துபாய் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகளில் காணப்படும் நகரங்களை ஒத்ததான ஓரு பெருநகரமாக இது திகழக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று, அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற, கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கேட்போர் கூடத்தில், மேற்படி கூட்டம்  நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, அமைச்சர் ஹக்கீம் தெரிவிக்கையில்; கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தியினை மேற்கொள்ளும் போது, அது சர்வதேச தரத்திலான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட, நவீன மயமான முன்னணி பெருநகரப் பிரதேசமாக மிளிரும் என்றார்.

இந்த மீளாய்வுக் கூட்டத்தின் ஆரம்பத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீ.கே.எஸ். மஹாநாம மற்றும் கலாநிதி ரீ.எம்.என். விஜயரத்தின ஆகியோர் வரை படங்களை காட்சிப்படுத்தி, உத்தேச கல்முனை சம்மாந்துறை பாரிய நகர அபிவிருத்தியின் போது மேற்கொள்ளப்படவுள்ள நவீனமயமாக்கல் செயல்பாடுகளைப் பற்றி விபரித்துக் கூறினர். துபாய், பஹ்ரைன் போன்ற நாடுகளில் காணப்படும் நகரங்களை ஒத்ததான ஓரு பெருநகரமாக இது திகழக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

2030ஆம் ஆண்டுக்கும் 2050ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் 05 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட பிரதேசமாக இந்தப் பகுதி மாற்றமடையுமென்ற மதிப்பீட்டில் பல்மாடிக்கட்டிடத் தொகுதிகள் பலவற்றையும், விஸ்தரிக்கப்பட்ட பாதைகளையும், ஏனைய நகரங்களை இணைக்கக்கூடிய புகையிரத மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கொண்டதாகவும் இப்பிரதேசம் திகழுமென அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த பாரிய நகர அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் போது உலக சந்தை வாய்ப்புகளுக்களுக்கான ஒரு வர்த்தக மையமாகவும், வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய பிரதான வர்த்தக மையமாகவும் கிழக்கு மாகாணத்தை இந்தப் பிரதேசம் வளர்ச்சியடையுமெனவும் அவர் மேலும் கூறினார். திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை வர்த்த மையங்களோடு இணைப்பை ஏற்படுத்துவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் ஹக்கீம் கருத்துத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்