கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்

🕔 June 2, 2017

ந்தியக் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக தனது 80 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்.

சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை 02 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

மதுரையில் 1937-ம் ஆண்டு பிறந்த கவிக்கோ அப்துல் ரகுமான் பள்ளி, கல்லூரி படிப்புகளை மதுரையிலேயே மேற்கொண்டார். இவரது தந்தையும், தந்தையின் தந்தையும் சிறந்த உருது கவிஞர்களாவர்.

இவர், தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்துறை தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவரது முதல் கவிதை நூலான ‛பால்வீதி’ 1974ம் ஆண்டு வெளிவந்தது.

தமிழில் ஹைக்கூ மற்றும் கஸல் ஆகிய பிறமொழி இலக்கியங்களைப் புனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர்.

தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது மற்றும் உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

சினிமாவில் பாட்டெழுதுவதற்காக கவிக்கோ அப்துல் ரகுமானை மிக அதிகமான சந்தர்ப்பங்கள் தேடி வந்திருந்தன. ஆனாலும், “அம்மி கொத்துவதற்கு, சிற்பி  தேவையில்லை”   என்று கூறி, கடைசி வரை சினிமாவுக்கு பாடல்களை எழுதமாட்டேன் என தீர்க்கமாய் இருந்தார்.

கவிக்கோ அப்துல் ரகுமானின் நல்லடக்கம் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்