புதினம் பார்க்கச் சென்ற 18 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு
வெள்ளத்தினைப் பார்ப்பதற்காக அநாவசியமான பயணங்களை மேற்கொண்ட 18 பேர் உயிரிழந்ததாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில்;
“தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 50 ஆயிரம் பொலிஸார் சேவையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். பொலிஸாரின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. தற்போது வரையில் எந்தவொரு திருட்டுச் சம்பவமும் பதிவாகவில்லை.
பொலிஸ் உயிர்பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட செயற்பாடுகளினால், தற்போது வரையில் 123 உயிர்களை காப்பாற்ற முடிந்துள்ளது.
இவ்வாறான நிலையில் அநாவசியமான முறையில், வெள்ள நிலைமைகளை பார்வையிடும் நோக்கில் படகுகளில் வருகின்றவர்களினால் நாம் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
தற்போதுவரையில் அவ்வாறு பார்வை யிட வருகை தந்தவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் மேற்படி அனர்த்தங்களை பார்வையிடும் நோக்கில் அநாவசியமாக பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்து கின்றோம்” என்றார்.