இளையராஜாவின் பாடல்களை பாட மாட்டேன்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறிவிப்பு

🕔 March 19, 2017

சையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை, இனி பாடப் போவதில்லை என்று புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும் இணைந்து காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்திருக்கின்றன. இந்த நிலையில், தற்போது இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பல்வேறு நாடுகளில் சுற்றுப்பணம் செய்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த இசை நிகழ்ச்சிகளை எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகனும், பின்னணி பாடகருமான சரண் முன்னின்று நடத்தி வருகிறார்.

அமெரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்திவரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, இளையராஜா தரப்பிலிருந்து அதிர்ச்சி தரக்கூடிய நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்துள்ள நிறுவனத்தினூடாக இந்த நோட்டீஸ் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸில், தனது முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மேடையில் பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்படி சர்ச்சைக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதில் வழங்கியுள்ளார்.

அதில், அமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இளையராஜா சார்பில் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். எனக்கு மட்டுமில்லாமல், பாடகி சித்ரா, சரண், விழா ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் கச்சேரி நடைபெறும் இடங்களின் நிர்வாகத்திற்கும் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டிருக்கிறது.

அதில், இளையராஜாவின் முன் அனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தாலோ, அல்லது மேடைகளில் பாடினாலோ அது காப்புரிமை மீறலாகும். அதுமாதிரியான உரிமை மீறலுக்கு பெருந்தொகையை அபாராதமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும், அதேநேரத்தில் சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாக வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘SPB 50’ என்ற மேற்படி நிகழ்ச்சி என்னுடைய மகனால் நடத்தப்பட்டது. கடந்த கனடாவில் இந்நிகழ்த்தியை தொடக்கினோம். பின்னர் ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்  மற்றம் துபாய் ஆகிய நாடுகளிலும், இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும் இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம்.

அப்போதெல்லாம் இளையராஜாவிடமிருந்து எனக்கு எந்தவித எதிர்ப்பும் கிளம்பவில்லை. ஆனால், இப்போது அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு வருகிறது என்பது எனக்கு தெரியவில்லை. இந்த சட்டங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இருந்தாலும், சட்டத்தை மதிக்க வேண்டியது என்னுடைய கடமை. ஆகையால், இனி மேடைகளில் இளையராஜாவின் பாடல்களை நான் பாடப்போவதில்லை.

ஆனாலும், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை நடத்தியாக வேண்டும் என்ற கட்டாயமும் எனக்கு உண்டு. இறைவன் அருளால் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களையும் நான் அதிகளவில் பாடியிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்