திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை; 46 நாட்களின் பின்னர் வெளியே
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அப்போதை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டதாகக் கூறி, போலி ஆவணமொன்றினைத் தயாரித்து, அதை வெளிப்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட திஸ்ஸ அத்தநாயக்க விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி வீரவர்த்தன, இன்றைய தினம் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை வழங்கினார்.
ரூபாய் 25 ஆயிரம் காசுப் பிணையிலும், தலா 05 லட்சம் ரூபாய் பெறுமதியான 04 சரீரப் பிணையிலும், அவரை விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதேவேளை, வெளிநாடு செல்வதற்கும் திஸ்ஸவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி, திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.