நாளைய தினம் பிறக்க, ஒரு நொடி தாமதமாகும்; நாசா அறிவிப்பு

🕔 June 30, 2015

Earth hourபூமி மெதுவாகச் சுழல்வதால் ஏற்படும் கால மாற்றத்தைச் சரி செய்வதற்காக, இன்றைய நாளில் ஒரு நொடி (லீப் நொடி) கூடுதலாக சேர்க்கப்படவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

எனவே,  சாதாரண நாட்களை விடவும், இன்றைய நாள் (ஜுன் 30) ஒரு நொடி நீண்ட நாளாக அமையவுள்ளது.

பூமியின் தற்போதைய சுழற்சி மெதுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. பொதுவாக ஒரு நாள் என்பது 86 ஆயிரத்து 400 நொடிகள் கொண்டதாகும். கடைசியாக 1820-ம் ஆண்டில்தான் மிகச் சரியாக 24 மணி நேரம் என்ற கால அளவு இருந்தது. புவி வெப்பமடைதல், சூரியன், நிலா, பூமிக்கு இடையிலான ஈர்ப்பு விசைச் செயற்பாடுகள் மற்றும் கடல் அலைகளின் அசைவுகள் உள்ளிட்டவை காரணமாக – பூமியின் சுழற்சி வேகம் குறைந்து கொண்டே வருகிறது.

இதனால், ஒரு நாளுக்கு 86400.0002 நொடிகளாகின்றன. அதாவது, 02 மில்லி செகண்ட்கள் அல்லது ஒரு நொடியில் 2 ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம் கூடுதலாக ஆகிறது. இந்த தாமதம் ஆண்டு முழுக்க தொடர்ந்து நடக்கிறது.

எனவே இந்த நேரத்தை ஈடு செய்வதற்காக, இந்தக் கூடுதல் நேரம் மொத்தமாகச் சேர்ந்து, ஒரு நொடி ஆனவுடன், வழக்கமாக நாம் பின்பற்றும் நேரத்தில், ஜூன் 30 ஆம் திகதி அல்லது டிசம்பர் 31 ஆம் திகதியன்று – ஒரு நொடி நிறுத்தி வைக்கப்பட்டு சரி செய்யப்படுகிறது.

வழக்கமாக, நள்ளிரவு 23:59:59 மணிக்குப் பிறகு அடுத்த நாள் 00:00::00: என்று தொடங்கும். ஆனால், இன்று (ஜூன் 30 ஆம் திகதி) நள்ளிரவு லீப் நொடி சேர்க்கப்படும்.

இதனால், ஜூன் 30 ஆம் திகதி நள்ளிரவு, அடுத்த நாள் தொடங்குவதற்கு முன்பு 23:59:60 என ஒரு நொடி சேர்க்கப்பட்டு (துல்லியமாகச் சொல்வதானால் ஒரு நொடி நிறுத்தி வைக்கப்பட்டு) பின்னர் ஜூலை 01 ஆம் திகதி 00:00:00 என மாறும் என்று நாசா தெரிவித்துள்ளது.

லீப் நொடி முறையானது, முதன்முதலில் 1972 ஆம் ஆண்டு பின்பற்றப்பட்டது. அதன் பிறகு, சுமார் 26 முறை இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் லீப் நொடி சேர்க்கப்படுவது – இது நான்காவது முறையாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்