சுமனரத்ன தேரரின் அடாவடிக்கு எதிராக, கிராம சேவகர்கள் கறுப்பு பட்டியணிந்து ஆர்ப்பாட்டம்
பட்டிப்பளை கிராம சேவை உத்தியோகத்தரை, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அச்சுறுத்தியமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச செயலகத்துக் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இதன்போது, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதன்போது கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம சேவை உத்தியோகத்தர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை ஏந்தியிருந்தனர். தேசிய உடை நிர்வாணமா?, காவியுடையே நீ மதகுருவா மடக்குருவா?, தரம் கெட்டு பேசும் நீ பிக்குவா? மக்குவா?, மதம் பிடித்த காவிக்கு சட்ட நடவடிக்கை உண்டா? போன்ற வாசகங்கள் அந்த அட்டைகளில் இடம்பெற்றிருந்தன.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை உடனடியாக மாவட்டத்தை விட்டு வெளியேற்றுமாறும், இந்நடவடிக்கை தொடர்பாக மன்னிப்பு கேட்காவிட்டால் தமது பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் எதிர்காலத்தில் தொடருமெனவும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இதன்போது கூறினர்.
பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கச்சைக்கொடி கிராமத்தில், சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்ற முயற்சிகளைத் தடுக்கச் சென்றிருந்த பிரதேச செயலாளர், கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் காணி அதிகாரி உள்ளிட்டோரை, சுமனரத்ன தேரர் அச்சுறுத்தியதோடு, அவர்களை மிகவும் கீழ்தரமான வார்த்தைகளால் திட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.