நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் புறக்கணிப்புக் குறித்து விவசாயிகள் விசனம்
– றிசாத் ஏ காதர் –
நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் காணப்படும் இறக்காமம் R17 வாய்க்காலானது மிக நீண்டகாலமாக துப்பரவு செய்யப்படாமல், நீர்த்தாவரங்களும், பற்றைகளும் வளர்ந்து காணப்படுவதனால், நெற்காணிகளுக்கான நீரினைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளிடம் பல முறை இங்குள்ள விவசாயிகள் முறைப்பாடு செய்தும், எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று பிரதேச விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, உரிய அதிகாரிகள் இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளாமல், வேண்டுமென்றே புறக்கணிக்கின்றார்களா என்கிற சந்தேகம் தமக்கு உள்ளதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், இறக்காமம் R17 வாய்க்காலினை மிக நீண்டகாலமாக, இப்பிரதேச விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அவர்களாகவே துப்பரவு செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூரிடம் இப்பிரதேச விவசாயிகள் விடுத்த வேண்டுகோளுக்கமைய, அவர் நேரடியாக அவ்விடத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இவ்விடயம் குறித்துப் பேசியதோடு, எதிர்வரும் காலங்களில் இவ்வாய்க்கலினை நீர்ப்பாசன திணைக்களம் துப்பரவு செய்வதற்கான உறுதிமொழியினை இணைத் தலைவர் மன்சூர் விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த வாய்க்கால் ஊடாக முதலியாவட்டை, இலுக்கு வட்டை மற்றும் கத்தினாமல்பத்த உள்ளிட்ட சுமார் 200 ஏக்கருக்கும் அதிகமான நெற்காணிகளுக்கு நீர் பாய்ச்சப்படுவதுடன், ஹிங்குரான சீனித் தொழிற்சாலைக்கான நீரினையும் இதனுாடாகவே பெற்றுக்கொள்கின்றனர்.