கொழும்புக் குப்பைகளை, புத்தளத்தில் கொட்ட வேண்டாம்: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாத்

🕔 September 21, 2016

Rishad - 075கொழும்பில் கொட்டப்படும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு சென்று, அந்த மக்களை தொடர்ந்தும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடாது என,  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார்.

புத்தளம் தொகுதியில் அமைந்துள்ள நுரைச்சோலையில் அனல் மின்சாரத்தை அமைத்து, கடந்த அரசாங்கம் அங்கு வாழ்ந்து வரும் மக்களை துன்பத்துக்குள்ளாக்கியதாகவும், இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எத்தனையோ தொகுதிகளையும் மாவட்டங்களையும் தாண்டி, கொழும்பில் சேரும் குப்பைகளை புத்தளத்திற்குக் கொண்டு சென்று, அங்கு கொட்டும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு, நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் அமை்சர் உரையாற்றியபோதே, மேற்கண்ட விடயங்களை கூறினார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது;

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை அந்த மக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் ,ஜனநாயக ரீதியான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும் கடந்த அரசாங்கம் நிறுவியதால் புத்தளம் மக்கள் படுகின்ற வேதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்கள் அதனை இன்னும் அனுபவிக்கின்றனர்.

இதனால் அந்தப் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் பயிர்ச்செய்கை, காய்கறிச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளன

புத்தளம் மாவட்டம் யுத்தத்தின் விளைவுகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட பிரதேசமாகும்.

1990 ஆம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் ஒரு லட்சம் மக்களை இன்று வரை தாங்கிக்கொண்டிருக்கும் பூமி – புத்தளம் மாவட்டம். இதனால் அந்த மக்கள் அனுபவிக்க வேண்டிய வளங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழில் ரீதியிலும், கல்வித்துறையிலும், சுகாதாரத்துறையிலும் மற்றும் இன்னோரன்ன துறைகளிலும் அவர்கள் பாதிப்புற நேரிட்ட போதும் அதனையும் தாங்கிக் கொண்டு, அகதி மக்களின் மனங்களை ஒரு நாள் கூட புண்படுத்தாது, அங்கு அகதிகளுடன் ஒற்றுமை பேணி வருகின்றனர். அதனை நாங்கள் நன்றியுணர்வோடு நோக்குகின்றோம்.

கடந்த 26 வருடங்களாக புத்தளம் தொகுதிக்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பற்றி இரண்டு பெரும்பான்மைக்கட்சிகளும் அலட்டிக்கொள்ளவில்லை. அதனைக் கருத்தில் எடுக்கவுமில்லை என்பதை நான் இங்கு வேதனையுடன் கூற விரும்புகின்றேன்.

யுத்த முடிவின் பின்னர், இதுவரை எந்த நன்மைகளும் கிடைக்கப்பெறாத புத்தளம் தேர்தல் தொகுதியில், தொடர்ந்தும் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாதென நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டால், மீன்பிடி வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் 20 ஆயிரம் பேர் நேரடியாக பாதிக்கப்படுவர். புத்தளத்திலுள்ள 04 உப்பளங்களில், இலங்கையின் தேவைக்குரிய 40% ஆன உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் வருவாய் பெறும் ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்படைவர் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதே போன்று 16 ஆயிரம் ஏக்கரில் விவசாயச்செய்கையும், 600 ஏக்கரில் இறால் செய்கையும் பாதிப்புறும் என்பதையும் இந்த உயர் சபையில் நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

எனவே இவ்வாறான முயற்சிகளை இனியும் முன்னெடுக்க வேண்டாமென கோருகின்றேன்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்