ஒலுவில் பேரணியில் தூரநின்று வேடிக்கை பார்த்த, முன்னாள் உதவித் தவிசாளர் நபீல்; மக்கள் விசனம்
– அஹமட் –
ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, நேற்று வெள்ளிக்கிழமை – அப்பிரதேச மக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ளாமல், அந்த ஊரின் மு.காங்கிரஸ் பிரமுகரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிளாருமான ஏ.எல். நபீல், தூர நின்று வேடிக்கை பார்த்தமை குறித்து, அப்பிரதேச மக்கள் தமது கடுமையான விசனங்களைத் தெரிவிக்கின்றனர்.
தமது பிரதேசம் கடலரிப்பினால் காவுகொள்ளப்படுவதைத் தடுக்கக் கோரி, ஒலுவில் பள்ளிவாசல் பரிபாலன சபையினால் மேற்படி கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தப் பேரணியில், அரசியல் மற்றும் கட்சி பாகுபாடுகளின்றி ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுபட்டுக் கலந்து கொண்டனர்.
ஆயினும் ஒலுவில் பிரதேசத்தின் முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளருமான ஏ.எல். நபீல், இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ளாமல், மக்களின் இந்த நடவடிக்கையினை தூரநின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
இதனைக் கவனித்த பலர், நபீலுடைய இந்த நடவடிக்கை குறித்து கடுமையான விசனங்களைத் தெரிவித்தனர்.
ஊர் அழியும் போதுகூட, அதைக் காப்பாற்றும் நடவடிக்கையில் கலந்துகொள்ளாமல், கட்சிப் பாகுபாடு பார்த்துக் கொண்டு, விலகி நிற்கும் இவ்வாறானவர்களுக்கு தேர்தல்களில் பாடம்புகட்ட வேண்டும் என்றும், பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.