அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கான வினாத்தாளில், தாறுமாறான பிழைகளுடன் கேள்விகள்
– வாத்தியார் –
அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளில் நடத்தப்பட்ட மூன்றாந் தவணை பரீட்சை, தரம் – 10 க்குரிய இஸ்லாம் பாட வினாத்தாளில் 15 க்கும் மேற்பட்ட வினாக்களில் எழுத்துப் பிழைகள் காணப்பட்டமை தொடர்பில் விசனம் தெரிவிக்கப்படுறது.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்தப் பரீட்சைக்குரிய வினாத்தாளில், அதிகமான அர்த்தப் பிறழ்வுடன் கூடிய எழுத்துப் பிழைகள் இடம்பெற்றமை காரணமாக, பரீட்சார்த்திகளும் பல்வேறு குழப்பங்களை எதிர்கொண்டனர்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கு, இறுதி ஆண்டுப் பரீட்சை நடத்தும் பொறுப்பை ‘அக்கரைப்பற்று வலய அதிபர்கள் சங்கம்’ பொறுப்பேற்றிருந்ததாகத் தெரியவருகிறது.
இந்த நிலையில், பரீட்சை வினாத்தாள்களில் அதிகமான எழுத்துப் பிழைகளும், சொற்பிழைகளும் காணப்பட்டதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த எழுத்துப் பிழைகள் காரணமாக, முழு அர்த்தமும் பிழைக்கும் நிலையும் ஏற்பட்டிருந்தது.
இஸ்லாம் பாடம் தரம் – 10, பகுதி – I இல் ஐந்தாவது வினாவில் முஸ்லிம் என்பதற்கு பதிலாக முஜ்லிம் எனவும், இஹ்லாஸ் என்பதற்குப் பதிலாக இல்லாஸ் எனவும், ஆறாவது வினாவில் தாறுல் ஃபனா என்பதற்கு பதிலாக தாறுல் பனா எனவும், ஏழாவது வினாவில் தர்தீப் திலாவத் என்பதற்கு பதிலாக தர்தீபுத் திலாவத் எனவும், பதினாறாவது வினாலில் அலி (ரழி) என்பதற்கு பதிலாக அலி (ரழ) எனவும், இருபத்தியோராவது வினாவில், நான்கு வெள்வேறு இடங்களில் கலிபா என்பதற்கு பதிலாக ஹலிபா எனவும், இருபத்தியெட்டாவது வினாவில் உஷ்மான் (ரழி) என்பதற்கு பதிலாக உஷமான் (ரழி) எனவும், முப்பத்து ஆறாவது வினாவில் உமர் (ரழி) என்பதற்கு பதிலாக உமர் (ரழ) எனவும் அச்சாகியிருந்தது.
இதே பரீட்சைத் தாளின் பகுதி – II இன் மூன்றாவது வினாவில் அபூபக்கர் (ரழி) என்பதற்கு பதிலாக அபூவக்கர் (ரழ) எனவும், ஏழாவது வினாவில் குறிப்பிடுக என்பதற்கு பதிலாக குறிபபிடுக என்றும் குறிப்பிடப்பட்டு, அதிகமான எழுத்துப் பிழைகளுடன் வினாப்பத்திரம் தயாரிக்கப்பட்டிருந்தது.
இவ் விவகாரம் தொடர்பில் பெற்றோர்களும் மாணவர்களும் சுட்டிக் காட்டுவதோடு, தமது பாரிய அதிப்தினையும் தெரிவிக்கின்றனர்.
அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல். காசிம் – ஒரு மௌலவி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.