அட்டாளைச்சேனையில் புகைத்தலுக்கு எதிரான ஊர்வலம்

🕔 July 6, 2018
– றிசாட் ஏ காதர் –

புகைத்தலுக்கு எதிரான ஊர்வலமொன்று, அட்டாளைச்சேனையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை ‘ரூ சடோ’ அமைப்பு இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தது.

அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய முன்றலில் ஆரம்பமான இந்த ஊர்வலம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வரை நடைபவனியாக சென்றடைந்தது.

அந்நூர் மகா வித்தியால மாணவர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் பெருமளவிலான இளைஞர்களும் பங்குகொண்டு ஆதரவு நல்கியிருந்தனர்.

மேற்படி புகைத்தல் எதிர்ப்பு ஊர்வலத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பிரதேச செயலக சமூக சீர்திருத்த உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் ஆகியோருடன் பிரதேச சுகாதார சேவைகள் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், அக்கரைப்பற்று நீதிமன்ற சமூக நன்னநடத்தை உத்தியோகத்தர், ஒய்வு பெற்ற சமூக சேவகரும், கோணவத்தை ஜூம்ஆ பள்ளிவசால் தலைவருமான எஸ்.எம். அமீன் உட்பட ரூ சடோ தன்னார்வ தொண்டு நிறுவன அங்கத்தவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

‘புகைக்கும் பணத்தை கல்விக்கு செலவிடுங்கள்’, ‘பீடி, சிகரட் கஞ்சா புகையிலை இல்லாத மண் தேவை’, ‘போதை அது சாவின் பாதை’, ‘கடனாளியாக்கும் சிகரட்’ ‘போதை வேண்டாம்’ போன்ற பாதாகள் இதன் போது காட்சிப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, ‘போதையற்ற சமூகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்’ என்கிற வாசகம் பொருந்திய ஸ்டிகர்களும் இதன்போது வாகனங்கள்மற்றும் கடைத்தொகுதிகளில் ஒட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்