முஸ்லிம்கள் மீதான கண்டி வன்முறை; மன்னிப்புக் கோரியது பேஸ்புக்
கண்டி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்கள் வேகமாகப் பரவுவதற்கு, பேஸ்புக்கில் சிங்கள மொழியில் இடப்பட்ட சில பதிவுகள் பெரிதும் காரணமாக அமைந்திருந்த நிலையில்; அது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
பேஸ்புக் ஊடக பேச்சாளர் அம்ரித் அஹுஜா “நாங்கள் தவறு செய்துவிட்டோம், நாங்கள் தாமதமாக செயற்பட்டோம்” என, இது தொடர்பில் தமது தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.
நாட்டில் கடந்த மார்ச் மாதம் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக, நாடு முழுதும் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
அத்துடன் இந்த வன்முறை சம்பவங்களினால் மூவர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கானக்கான வீடுகள், பள்ளிவாசல்கள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
மேலும், வன்முறை ஏற்படவும், அது வேகமாக மக்கள் மத்தியில் பரவவும் பேஸ்புக்கில் இடப்பட்ட பதிவுகள், முக்கிய காரணமாக அமைந்தமையினால் ஒரு வார காலம் நாட்டில் பேஸ்புக் முடக்கப்பட்டிருந்தது.
பேஸ்புக்கில் சிங்கள மொழியில் சிலர் பதிவிட்ட விரும்பத்தகாத மற்றும் இனவாதத்தை தூண்டும் கருத்துகளை அடையாளம் கண்டு, அந்த நிறுவனம் நீக்கவில்லை என பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்து.
இதற்கு பேஸ்புக்கின் ஊடக பேச்சாளர் அம்ரித் அஹுஜா “நாங்கள் தவறு செய்துவிட்டோம், நாங்கள் தாமதமாக செயற்பட்டோம்” என தமது தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இது போன்ற நிலை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க இலங்கையில் இயங்கி வரும் பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிங்கள மொழி கற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சிங்கள மொழி தெரிந்தவர்களை அதிகளவில் பேஸ்புக் நிறுவனம் தற்போது பணியில் அமர்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது