த.தே.கூட்டமைப்புடனான நட்பின் காரணமாகவே, வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி, பகிரங்கமாக நாம் பேசுவதில்லை: ஹக்கீம் தெரிவிப்பு
– மப்றூக் –
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு பற்றி, பகிரங்கமாக முஸ்லிம் காங்கிரஸ் எதையும் பேசுவதில்லை என்பது, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலுள்ள நல்லுறவின் ஓர் அம்சமாகும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
நிந்தவூரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
“தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நான் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்கிறார்கள். வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது, நாளை இடம்பெறுகின்ற ஒரு விவகாரம் போல் இவர்கள் பேசுகின்றனர். இது நடக்கும் காரியமென்றால் பரவாயில்லை.
ஆனால், தமிழ் சமூகத்தின் அபிலாசைகளுக்குக் குறுக்கே நின்று, அதில் மண்ணள்ளிப் போடும் வேலையை நாங்கள் பார்க்கத் தேவையில்லை.
வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில், நாங்கள் பகிரங்கமாக எதையும் சொல்வதில்லை என்பது, மு.காங்கிரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலுள்ள நல்லுறவின் ஓர் அம்சமாகும்.
அமைப்பற்றி தேவை வரும் நேரத்தில் நாம் பேசிக் கொள்வோம், அதைப்பற்றி சிந்திப்போம்.
எங்களுக்கான ஒரு தனி மாகாணம் அமைய வேண்டும். அமையாமல் இது எதுவுமே நடக்க மாட்டாது. ஆனால், அதிலுள்ள சிக்கல் எல்லோருக்கும் தெரியும். வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது எங்களின் தலைமுறையில் நடக்குமா என்கிற சந்தேகம் இருக்கிறது” என்றார்.