அரசிலிருந்து விலகுவேன்; பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும எச்சரிக்கை
மீகஹதென்ன பாடசாலையொன்றில், தனது ஆரவாளர்களின் பிள்ளைகளுக்கு இடமளிக்கப்பட வேண்டுமென பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும தெரிவித்துள்ளார்.
தனது கோரிக்கைகள் தொடர்பில் இன்றைய தினத்துக்குள் தீர்வு வழங்காவிட்டால், நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாகவும், பிரதியமைச்சர் கூறியுள்ளார்.
தனது ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் பெற்றோரின் 10 பிள்ளைகளுக்கு மீகஹதென்ன பாடசாலை ஒன்றில் இடமளிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கடந்த 27ஆம் திகதி, தேவரப்பெரும, பெற்றோருடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டார்.
மதுகம வலய அலுவலகத்துக்கு முன்னால் தற்போதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர், குறித்த மாணவர்களை பாடசாலையில் இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையாயின் தனது போராட்டத்தை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமாக மேற்கொள்ளவுள்ளதாகவும் முன்னதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், குறித்த மாணவர்களை பாடசாலையில் இணைத்துக் கொள்ளவில்லையாயின், அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாகவும், அரசுக்கு எதிராக செயற்படவுள்ளதாகவும் இன்று காலை பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.