ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கு ஜெமீல் முயற்சிக்கின்றார்: சிராஸ் மீராசாஹிப்

🕔 May 4, 2016

Ziras - 001– அகமட் எஸ். முகைடீன் –

சாய்ந்தமருது மக்களுக்கான நகர சபை –  எதிர்வரும் றமழானுக்கிடையில் வழங்கப்படாது விட்டால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு தலைமையில் சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பாக பாரிய சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தப் போவதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்திருப்பது வேடிக்கையான விடயம் என்றும், இந்தக் கூற்றானது அவரின் கோமாளித்தனத்தினை எடுத்துக் காட்டுவதாக உள்ளதாகவும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

“முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றஊப் ஹக்கீமுடைய முயற்சியினால் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை கிடைக்கும் காலம் வெகுவிரைவில் உள்ளது. ஆனால், றமழான் மாதத்துக்கிடையில் கிடைப்பதற்கான எந்தச் சாத்தியக் கூறும் இல்லை எனவும் அறிய முடிகிறது. இந்தச் செய்தியினை தெரிந்து கொண்ட ஜெமீல், சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையானது தனது முயற்சியால் கிடைக்கப் பெற்றதாக மக்களுக்கு காண்பிப்பதற்காக முயற்சி எடுக்கின்றார். அதனால்தான், குறித்த விடயம் தொடர்பாக இதுவரை காலமும் வாய் மூடி மௌனியாக இருந்த ஜெமீல், றமழானுக்கு முன்னதாக சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை கிடைக்காவிட்டால் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தவுள்ளதாகச் சொல்லுகிறார். இது ஊரார் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் ஓதுவதற்கான முயற்சியாகும்.

நடுநிலையாக பார்த்தால் ஜெமீல் நடத்தப் போகும் சத்தியாக் கிரக போராட்டம் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரானதாக அமைய வேண்டும். ஏனெனில் ஜெமீல் சார்ந்த கட்சியின் தலைவராக றிசாத் பதியுதீன் இருப்பதோடு, அவர் ஒரு கெபினட் அமைச்சராகவும் காணப்படுகின்றார். அது மாத்திரமன்றி கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரையாற்றுகையில், ‘ஜெமீல் என்னிடம் தேசியப்பட்டியல் கேட்கவில்லை, அவர் சாய்ந்தமருதின் நகர சபை கோரிக்கையினை மாத்திரமே முன்வைத்து எமது கட்சியில்  இணைந்து கொண்டார், அதனை தாம் வழங்குவோம்’ எனக் கூறினார்.

எனவே ஜெமீல் பூச்சாண்டி காட்டாது –  குறித்த கோரிக்கையின் வெற்றியினை துரிதப்படுத்துவதற்காக, அவர் சார்ந்த கட்சியின் தலைமையினை வலியுறுத்துவதை விடுத்து, வெறுமனே வீரவசனங்கள் பேசி மக்களை முட்டாளாக்குவதற்கு முயற்சிக்கக் கூடாது.

ஏதோ பெரும் அபிவிருத்திகளை சாய்ந்தமருதுக்கு செய்த ஒரு அரசியல்வாதி போன்று தன்னை அடையாளப்படுத்த முனையும் ஜெமீல், குறிப்பிடும் படியாக எந்த ஒன்றையும் சாய்ந்தமருதுக்கோ அல்லது வேறு எந்த ஊருக்குமோ செய்தது  கிடையாது. அவர் சாய்நதமருதுக்கு துரோகமே செய்தார். சாய்ந்தமருதுக்கு என்னால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளை தடுக்கவே முற்பட்டார். இதனை யாவரும் அறிவார்கள்.

சாய்ந்தமருது மண் பெற்ற கல்முனை மாநகர பிதா என்ற அரசியல் அந்தஸ்தை இல்லாதொழிக்க செயல்பட்டார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒருசில அரசியல் உயர் பீட உறுப்பினர்களை ஜெமீல் இணைத்துக் கொண்டு, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை நெருக்குதலுக்குள்ளாக்கி சாய்ந்தமருது பெற்ற அந்த அந்தஸ்தை இழக்கச் செய்தார். அத்தோடு சாய்ந்தமருது வைத்தியசாலை வீதி அபிவிருத்தி செய்யப்பட்டபோது அதற்கான கொமிசன் ஜெமீலுக்கு கிடைக்கவில்லை என்பதற்காக, அந்த அபிவிருத்தியினை இடையில் நிறுத்தினார்.

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை எனது முயச்சியால் வெற்றி பெறும் தறுவாயில் இருந்தபோது, அதனை தடுத்து நிறுத்திய பெருமையும் ஜெமீலையே சாரும். சாய்ந்தமருது பீச் பார்க் எனது  காலப்பகுதிக்கு முன்னதாக தற்போதைய விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸினால் அபிவிருத்தி செய்யப்பட்டபோது, அதனையும் ஜெமீல் உடைத்தெறிந்தார். இவ்வாறு ஜெமீல் சாய்ந்தமருதுக்கு இழைத்த தூரோகங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆக, ஜெமீல் தனது குள்ள நரி விளையாட்டை நடத்துவதை விடுத்து, இனியாவது சாய்ந்தமருது மக்களுக்கு நல்லது செய்ய விரும்பினால், அமைச்சர் றிசாத் பதியுதீனால் வழங்கப்பட்டுள்ள சுகபோகங்களுக்கு சோரம் போகாது, றிசாத் பதியுதீனை நெருக்குதலுக்கு உள்ளாக்கி, ஆகக் குறைந்தது – குறித்த கோரிக்கை வெற்றி பெறும் காலத்தை முற்படுத்துவதற்காகவாவது முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.

Comments