பிரபாகரனின் உடலை எரித்ததாகக் கூறுவது தவறான தகவலாகும்: சரத் பொன்சேகா
புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் புதைக்கப்பட்டதாக, முன்னாள் ராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் உடல் எரிக்கப்பட்டு, அந்தச் சாம்பல் கடலில் வீசப்பட்டதாக, புதிதாக ராஜதந்திரிப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ராணுவத்தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ‘தின செய்தி’ பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மானின் உடலும் எரிக்கப்பட்டு, சாம்பல் கடலில் வீசப்பட்டதாகவும் முன்னாள் ராணுவத் தளபதி தயா ரத்நாயக்க கூறியுள்ளார்.
இந்த நிலையில், தயா ரத்நாயக்கவின் மேற்படி தகவல்களை மறுத்துப் பேசிய போதே, சரத் பொன்சேகா மேற்கண்ட தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சரத் பொன்சேகா மேலும் கூறுகையில்;
“இறுதி யுத்தத்தின் போது, ராணுவத்தினருக்கும் – புலிகளுக்குமிடையில் நடைபெற்ற சண்டையினை அடுத்து, பிரபாகரனின் உடல் நந்திக் கடலில் கண்டெடுக்கப்பட்டது.
பிரகாகரனின் உடல் எரிக்கப்படவில்லை. புதைக்கப்பட்டது.
இறுதி யுத்தத்தின் போது தயா ரத்நாயக்க சண்டைக் களத்தில் இருக்கவில்லை. எனவே, அங்கு என்ன நடந்தது என்பது பற்றி அவருக்குத் தெரியாது” என்றார்.