செந்திலைக் கைது செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவு

🕔 March 1, 2016

Senthil - 0765– க. கிஷாந்தன் –

லங்கை தொழிலாளர் காங்கிரஸில் சிரேஷ்ட உப தலைவரும், ஊவா மாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மொழிகள் மற்றும் நல்லிணக்க பிரதி அமைச்சராக கடமையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வாகனத்தை, கடந்த 2014ஆம் ஆண்டு  ஹட்டன் – கினிகத்தேனை பகுதியில் வழிமறித்து இடையூறு விளைவித்தார் எனும் குற்றச்சாட்டில், செந்தில் தொண்டமானுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஹட்டன் பொலிஸார், ஹட்டன் நீதிமன்றில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

மேற்படி வழக்கில் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் உட்பட ஊவா மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம். ராம், எஸ். சக்திவேல், எம். ரமேஸ் மற்றும் எம். உதயகுமார் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, அமைச்சர் செந்தில் தொண்டமான் சுகயீனம் காரணமாக நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லை என, அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எஸ். ராம்மூர்த்தி தெரிவித்ததோடு, அதற்கான மருத்துவ அறிக்கையினையும் சமர்ப்பித்தார்.

எனினும் அந்த மருத்துவ அறிக்கையை நிராகரித்த நீதவான் பிரசாத் லியனகே, இந்த வழக்கு விசாரணைகளின் போது செந்தில் தொண்டமான் முன்னிலையாக தவறியதால், அவரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்தார்.

இந்த நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 06ஆம் திகதிக்கு இந்த வழக்கு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்