தாஜுதீன் கொலை வழக்கு: சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுத்தீனின் மரணமானது, கொலையாக இருக்கக் கூடும் என்பதால், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவை 296 ஆம் பிரிவின் படி, தாஜுதீனின் மரணமானது ஒரு கொலையாக இருக்கக் கூடும் என்பதனால், சந்தேக நபர்களை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஆனந்த சமரசேகர மற்றும் தற்போதை சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் அஜித் தென்னக்கோன் ஆகியோர் சமர்ப்பித்திருந்த பிரேத பரிசோதனை அறிக்கைகள், டி.என்.ஏ. மரபணுப் பரிசோதனை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரின் தகவல்கள் மற்றும் சி.சி.ரி.வி. கமராக் காட்சிகள் ஆகியவற்றினைப் பரிசீலனை செய்ததன் அடிப்படையில், மேற்படி உத்தரவினை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அந்த வகையில், தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.