இலங்கையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தமிழ் பௌத்தர்கள்: நாடாளுமன்றில் தெரிவிப்பு
இலங்கையில் 22 ஆயிரத்து 254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் உள்ளனர் என்று அரச தரப்பு பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.
ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவின் வாய்மொழி மூலமான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, மேற்கண்ட தகவலை பிரதம கொறடா தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கில் 470 தமிழ் பெளத்தர்கள் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புள்ளி விபரவியல் திணைக்களம் 2012 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் கயந்த கருணாதிலக்க கூறினார்.
வட மாகாணத்தில் 2013 ஆம் ஆண்டுவரை தமிழ் மொழியிலான பௌத்த அறநெறிப் பாடசாலையொன்று இருந்ததாகவும், அதில் 80 மாணவர்கள் கல்வி கற்றதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்தப் பாடசாலையை மீளவும் அங்கு அமைப்பதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதம கொறடா தெரிவித்தார்.