பதவி இழந்தார் கப்டன்
தென்னிந்திய நடிகர் விஜயகாந்த் – இந்தியாவின் தமிழ் நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் இது குறித்து அறிவித்துள்ளார்.
விஜயகாந்த் தலைமை வகிக்கும் கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் 08 சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ) , தமது பதவியை ராஜிநாமாச் செய்துள்ளனர்.
இதன் காரணமாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் தகுதியை விஜயகாந்த் இழந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி தாவும் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளமையினால், சட்டமன்ற உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு செல்வதாயின், அவர்களின் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய தேவை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்துடன் அதிருப்தி கொண்டுள்ள அவரின் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், ஏற்கனவே தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்திருந்தனர்.
எனவே, ராஜிநாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், ஜெயலலிதா தலைமை வகிக்கும் கட்சியான அ.தி.மு.க. வில் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘கப்டன்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜயகாந்த், தனது பேச்சு மற்றும் செயற்பாடுகளால், அவரின் கட்சி பிரமுகர்கள் பலரைப் பகைத்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.