தலைப்புச் செய்திகள்

‘தூய்மையான இலங்கை’ திட்டம் ஜனவரியிலிருந்து ஆரம்பம்

‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்தை அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி தொடங்க உள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த முயற்சியை அமுல்படுத்துவதை மேற்பார்வையிட ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உட்பட 18 உறுப்பினர்களை இந்த செயலணி கொண்டுள்ளது.

இந்த செயலணிக்கு திட்டமிடல், வழிகாட்டுதல், செயற்படுத்துதல், முன்னேற்றத்தை கண்காணித்தல் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தை நிறைவு செய்வதை உறுதி செய்தல் ஆகிய பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்துக்கான ஜனாதிபதி செயலணியில் தமிழர் மற்றும் முஸ்லிம்கள் சார்பில் எவரும் நியமிக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.