கடத்தல் குற்றத்தை, தண்டனை சட்டத்தில் உள்ளடக்க வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்
கடத்தப்பட்டவர்கள் தொடர்பான குற்றத்தை தண்டனைச் சட்டத்தில் கொண்டு வந்து, அந்தக் குற்றத்துக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாக, சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலயே அமைச்சர்ஹக்கீம் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
காணாமல் போனவர்கள் என்ற விடயத்தில் தமிழர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டனர். முஸ்லிம்களும் இதனால் பாதிப்புகளை சந்தித்தார்கள். காணாமல் போனவர்களில் சிங்களச் சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் என்ற சான்றிதழ் வழங்கும் விடயத்தில் ஐ.நா. சட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாண உறுப்பினர் ஒருவர் காணாமல் போனார். ஆனால் அவருக்கு என்ன நடந்தது என்று இன்வரை தெரியாது. இந் நிலையில் அவரின் தாயார் இன்னமும் அவர் உயிரோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையுடனேயே வாழ்ந்து வருகின்றார்.
எனவே, பலவந்தமான கடத்தல் தொடர்பான குற்றத்தை, எமது தண்டனை மட்டத்தில் கொண்டு வரவேண்டும். அத்தோடு பரணகம ஆணைக்குழு உட்பட பல ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளுக்கமைய, கடத்தலை தண்டனைக்குறிய குற்றமாக்கி தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.