உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்களுக்கு, ஆளுநர்கள் வழங்கும் நியமனம் சட்ட விரோதமானது: கபே தெரிவிப்பு

🕔 July 5, 2024

மாகாண ஆளுநர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நியமனங்களை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ‘கபே’ அமைப்பு, தேர்தல் ஆணைக்குழுவை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ‘கபே’ தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் விசேட கடிதமொன்றை தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று (05) வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

“கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களின் ஆளுநர்கள் மூலமாக உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் மேயர்கள் மற்றும் தவிசாளர்களுக்கு – ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக இணைப்பாளர் பதவியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனூடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்களைப் பாவிப்பதற்குரிய அனுமதி வழங்கப்பட்டிருப்பதன் மூலம் – தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அரச சொத்து துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்து, தேர்தல் தினம் குறிப்பிடப்படாமல் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுவது சட்டவிரோதமாகும்.

அதேபோன்று இந்த நியமனத்தின் ஊடாக அரச சொத்துக்கள் பாவிக்கப்படுகின்றமை, தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுகின்ற செயற்பாடாகும் என்பதையும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

இதேநேரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர் வசமே காணப்படுவதனால், இவ்வாறு அரச சொத்து துஷ்பிரயோகத்துக்கு துணை போகக்கூடிய அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்