அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, எம்.பி பதவியை இழப்பார்: திஸ்ஸ குட்டியாராச்சி

🕔 April 22, 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி யாப்பின் பிரகாரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பதவியேற்றுள்ள – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் கலந்துரையாடவில்லை எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் விரைவில் முடிவெடுப்பார் எனவும் அவர் ஊடக சந்திப்பில் கூறியுள்ளார்.

கட்சியின் யாப்பு மற்றும் சட்டங்களின்படி, ஒருவர் மற்றுமொரு அரசியல் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றவுடன் அவரின் கட்சி உறுப்புரிமையை விரைவில் இழக்க நேரிடும் என்று குட்டியாராச்சி சுட்டிக்காட்டினார்.

இதனால், அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ – பொதுஜன பெரமுன கட்சி உறுப்புரிமையை இழக்க நேரிடும் என்றும், அதன் மூலம் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.

“அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ – பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்று, அந்தக் கட்சியின கீழ்தான் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் மற்றுமொரு கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.அதனால், அவரது SLPP உறுப்புரிமை இரத்துச் செய்யப்படும், அதன் விளைவாக, அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்” என, குட்டியாராச்சி தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்