மைத்திரியை விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு
ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரியாகச் செயல்பட்டவர் குறித்து தனக்குத் தெரியும் என்றும், தன்னிடம் விசாரித்தால் அல்லது உத்தரவு பிறப்பித்தால், அந்தத் தகவலை நீதிமன்றில் வெளியிடத் தயார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெள்ளிக்கிழமை (22) கூறினார்.
கண்டியில் ஊடகங்களிடம் பேசி மைத்திரிபால, இது தொடர்பான தகவல்களை வெளியிட தயாராக இருப்பதாகவும், அதேவேளை, தகவல்களை கண்டிப்பாக ரகசியமாக வைத்திருப்பது நீதிபதிகளின் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு – ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (23) முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த கருத்து அரசியல் அரங்கில் சர்ச்சையை கிளப்பியுள்ளதுடன், 250க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்த கொடூரமான குண்டுவெடிப்புகள் பற்றிய முக்கிய தகவல்களை வேண்டுமென்றே முன்னாள் ஜனாதிபதி மைத்திரி – மறைத்ததாவும் விமர்சிக்கப்படுகிறது.
தொடர்பான செய்தி: ஈஸ்டர் தின தாக்குதலை நடத்தியது யார் என்பது எனக்குத் தெரியும்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி