தென்கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய பதிப்பகம் இணைந்து நடத்திய நூல்கள் அறிமுகமும் வெளியீடும்

🕔 March 3, 2024

தென்கிழக்கு பலகலைக்கழகத்துடன் இணைந்து – இந்திய தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகம் நடத்திய – தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகத்தின் ‘ஸிஹாஹ் ஸித்தா’ கிரந்தங்களின் (தமிழ்) மொழிபெயர்ப்புத் தொகுதி அறிமுகமும் ‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ (தமிழ்) நூல் வெளியீடும் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் இன்று (03) பல்கலைக்கழக கலை கலாச்சார கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஒலிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீட் நெறியாள்கையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் வரவேற்புரையினையும், உபவேந்தர் தலைமையுரையினையும், சிறப்புரைகளை இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிபீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர், இந்திய சென்னை மந்தைவெளி ஈத்கா மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா கே.எம். இல்யாஸ் ரியாஜி, இந்திய புதுப்பேட்டை மஸ்ஜிதே மஹ்மூதின் தலைமை இமாம் ஹாபிழ் ஏ. பீர்முகம்மது பாகவி ஆகியோரும் ஆற்றினர்.

நிகழ்வில் ரஹ்மத் பதிப்பகத்தின் நிறுவுனர் எம்.ஏ முஸ்தபா, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்றை வழங்கி அறிமுகம் செய்து வைத்தார்.

அதேவேளை இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிபீடத்துக்கும் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் தென்கிழக்கு பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்துக்கும் நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதனை நூலகர் எம்.எம்.றிபாவுடீன் பெற்றுக்கொண்டார்.

நூலின் முதற்பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி பெற்றுக்கொண்டதுடன், அதிதிகளும் எம்.ஏ. முஸ்தபாவிடமிருந்து பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்