துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் மரணம்: பதவி உயர்வு வழங்க உத்தரவு
சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது – அண்மையில் மல்வத்து ஹிர்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய பொலிஸ் சார்ஜன்ட் இன்று (12) காலை உயிரிழந்த நிலையில், அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில், குறித்த பொலிஸ் சார்ஜன்ட் – மரணத்திற்குப் பின்னர் உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மல்வத்து ஹிரிபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சனிக்கிழமை (10) பட்டபொல பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது கைகலப்பு ஏற்பட்டு, சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது 51 வயதான பொலிஸ் சார்ஜன்ட் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில், அவரின் துபபாக்கியுடன் சந்தேக நபர் தப்பிச் சென்றார்.
இஹல லுணுகம பிரதேசத்தில் வசிக்கும் பொலிஸ் சார்ஜன்ட் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.