தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பமானது: விசேட பேச்சாளராக கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா கலந்து கொண்டார்

🕔 February 10, 2024

– பாறுக் ஷிஹான், கே.ஏ. ஹமீட், எம்.எப். நவாஸ் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று (10) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் ஆரம்பமானது.

இன்றைய  இந்நிகழ்வுகள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா தலைமைலும் நடைபெற்றன.

பட்டமளிப்பு விழாவின் முதல் அமர்வின் விஷேட பேச்சாளராக அமெரிக்க – இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளர்  கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா கலந்து கொண்டு உரையாற்றினார்.

முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகளும் இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகளும் மூண்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் அரசியல் மற்றும் சமாதான கற்கை துறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.எல்.ஏ. காதர் விருதினை முகம்மது அமீர் மர்யம் பெற்றுக்கொண்டார்.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் தமிழ் துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்த விருதினை முஹம்மட் அலி றீஷா நூர் சுவீகரித்தார்.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் ஹிந்து கலாச்சார துறையில் சிறந்த மாணவருக்கான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஞாபகார்த்த விருதை வனிதா உதயகுமார் பெற்றுக்கொண்டார்.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இஸ்லாமிய சிந்தனைகள் மற்றும் நாகரிகம் என்ற துறையில் – சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.ஏ. எம். சுக்ரி ஞாபகார்த்த விருதினை நூறுல் ஸிபா ஜாபீர் பெற்றுக்கொண்டார். 

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி துறையில் சிறந்த மாணவருக்கான இஸ்மாயில் டீன் மரிக்கார் விருது செயினுல் ஆப்தீன் சாஜித் என்பவருக்குக் கிடைத்தது.

மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டன.

 விழாவின் மூன்றாவது அமர்வில் விஷேட பேச்சாளராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி உடவத்த கலந்து கொண்டு உரையாற்றினார்.

குறித்த அமர்வின்போது தொழில்நுட்பவியல் பீடத்தின் சிபாரிசின் கீழ் கலாநிதி திலகரத்ன ஆராச்சிகே பியசிறி – கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2017/2018 ஆம் கல்வி ஆண்டில் விஞ்ஞானத்தில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த விருதினை டினூபமா சமதி ஹேவாகே பெற்றுக்கொண்டார்.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் ரசாயன துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் சுல்தான்பவா ஞாபகார்த்த விருது வெடநாயக்க பிலிப்புல்லைய உமேஷா சுபுன்சாரி விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்டது.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் பீடத்தில் சிறந்த மாணவருக்கான விருதை முகம்மது நுஷான் பாத்திமா நிfப்லா சுவீகரித்துக்கொண்டார்.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் சிவில் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருதும் முகம்மது நுஷான் பாத்திமா நிfப்லாவுக்கே கிடைத்தது.  

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் எலக்ரிகல் அண்ட் எலக்ட்ரோனிக் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது திசாநாயக்க முதியன்செலாகே சத்துமினி சாரிக்க திசாநாயக பெற்றுக்கொண்டார்.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் மெகானிகல் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது ஷியாட் முபீஸ் சாஹிப் என்பவருக்கு வழங்கப்பட்டது.

நாளை 2024.02.11 நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது அமர்வுகளில் வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் வெளிவாரி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்