சர்வதேச அழுத்தத்தில் சிக்கி, நாட்டுக்கு சில அரசியல்வாதிகள் சேதத்தை ஏற்படுத்துகின்றனர்: மஹிந்த தெரிவிப்பு

🕔 December 15, 2023

நாட்டில் அமுல்படுத்தப்படும் அதிக வரிகள், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (டிசம்பர் 15) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் இலங்கை இன்னும் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றார்.

நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கான பாதையை உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்பட வேண்டும் என்றும், நாடு இன்னொரு நெருக்கடியை எதிர்கொள்ள கட்சி இடமளிக்காது என்றும் அவர் கூறினார்.

சில அரசியல்வாதிகள் நாட்டின் இளைஞர்களை ஏமாற்றி தமது அரசியல் நோக்கங்களை அடைய முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

“அவர்கள் சர்வதேச அழுத்தத்தில் சிக்கி தங்கள் சொந்த நாட்டுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால்தான் அன்றும் இன்றும் ஒப்பிடும்போது இலங்கைக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தில் குறைவில்லை என்று கூறுகிறோம்” என்றார்.

அடுத்த தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – பலம் வாய்ந்த கட்சியாக இருக்கும் என்றார்.

“இந்த தேசத்தை ஒன்றாகக் கட்டியெழுப்புவோம். பொதுமக்கள் எதிர்பார்க்கும் தூய்மையான அரசியலை வழங்க எங்களுடன் சேர விரும்பும் அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம்”என அவர் மேலும் கூறினார்.

பொதுஜன பெரமுன தேசிய மாநாட்டில் – மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் அந்தக் கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்