சஜித் பிரேமதாஸ, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக, டயானா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அந்தக் கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (24) தள்ளுபடி செய்துள்ளது.
இவர்கள் குறித்த பதவிகளில் நீடிப்பதற்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு ராஜாங்க அமைச்சர் டயானா கமகே வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோருக்கு சட்டரீதியாக அந்த பதவிகளை வகிக்க முடியாது எனவும், அவர்கள் அப்பதவிகளை வகிப்பதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறும் அவர் கோரியிருந்தார்.