1967இல் கிழக்கு ஜெருசலேமை தலைமையகமாக கொண்டிருந்த பலஸ்தீன அரசை மீள நிறுவ வேண்டும்: அரபு லீக் உச்சி மாநாட்டில் சஊதி பட்டத்து இளவரசர் தெரிவிப்பு
![](https://puthithu.com/wp-content/uploads/2023/11/MBS-022.jpg)
காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் சஊதி அரேபியாவின் பட்டத்து இளவரசில் முகம்மது பின் சல்மான் அழைப்பு விடுத்துள்ளார்.
57 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘கூட்டு அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு’ உச்சிமாநாடு, இன்று சஊதி அரேபியாவின் தலைநகர் றியாத்தில் இன்று (11) பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஆரம்பமானபோது, அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
“இது ஒரு மனிதாபிமான பேரழிவாகும். சர்வதேச மனிதாபிமான சட்டங்களை இஸ்ரேல் மொத்தமாக மீறியமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதில், சர்வதேச சமூகமும் ஐ.நா. பாதுகாப்பு சபையும் தோல்வியுற்றுள்ளமையை இது நிரூபித்துள்ளது” எனவும் முகம்மது பின் சல்மான் இதன்போது கூறினார்.
“இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றங்கள் முடிவுக்கு வருதல், பலஸ்தீனிய மக்களின் நிறுவப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து, 1967 இல் கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட அரசை மீளமைத்தல் ஆகியவையே அமைதியை அங்கு ஏற்படுத்தும் என நாம் நம்புகிறோம்” எனவும் அவர் அங்கு வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டின் ஈரான் ஜனாதிபதி ரைசி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 11 ஆண்டுகளில் சஊதி அரேபிய தலைநகருக்குச் சென்ற முதல் ஈரானிய ஜனாதிபதி இவராவர.கடைசியாக 2012 இல் மஹ்மூத் அஹ்மதிநெஜாத் சஊதி சென்றிருந்தார்.
பலஸ்தீன் அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தார்.
![](https://puthithu.com/wp-content/uploads/2023/11/MBS-011.jpg)