காஸா மக்களுக்கான சஊதி அரேபியாவின் நிதி சேகரிப்பு: 04 நாளில் 337 மில்லியன் றியால் தாண்டியது
காஸாவிலுள்ள பலஸ்தீன் மக்களுக்கு – சஊதி அரேபியாவின் பிரபலமான உதவி பிரச்சாரத்தின் மூலம் திரட்டப்பட்ட மொத்த வசூல் ஞாயிற்றுக்கிழமை 337 மில்லியன் சஊதி றியாலை (இலங்கை மதிப்பில் 2933 கோடி ரூபாய்) தாண்டியுள்ளதாக ‘சஊதி கசற்’ செய்தி வெளியிட்டுள்ளது.
‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ (KSrelief) தொடங்கிய பிரச்சாரத்தின் நான்காவது நாளில் 337,810406 சஊதி றியாலை ஐ அடைந்துள்ளது. இதற்காக மொத்தம் 533,107 பேர் தங்கள் நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.
வியாழன் அன்று இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான் ஆகியோரின் உத்தரவுகளுக்கு இணங்க ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ – நிதி திரட்டும் பிரச்சாரத்தை தொடங்கியது.
இந்த பிரச்சாரத்திற்கு மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் முறையே 30 மில்லியன் மற்றும் 20 மில்லியன்சஊதி றியால்களை நன்கொடையாக வழங்கினர்.
பல்வேறு நெருக்கடிகளில் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவளிப்பதில் சஊதி அரேபியாவின் வரலாற்றுப் பங்கின் ஒரு பகுதியாக – இந்த நிதி திரட்டும் பிரச்சாரம் உள்ளது என – சவூதியின் மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி ஆதரவு பாலஸ்தீன மக்களை சென்றடைவதை ஒருபோதும் நிறுத்தவில்லை என்று ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின்’ பொது மேற்பார்வையாளர் டொக்டர் அப்துல்லா அல் – ரபீஹ் கூறியுள்ளார்.
ஏறக்குறைய ஒரு மாத காலமாக காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் ஆக்கிரமிப்பால் பாலஸ்தீன மக்கள் படும் துன்பத்தைப் போக்க இந்த மக்கள் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. சஊதிக்கு வெளியே நன்கொடைகளைப் பெறுவதற்கும் நன்கொடைகளை வழங்குவதற்கும் ‘மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம்’ மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட ஒரே நிறுவனம் என்பதை சஊதி அரேபியாவின் உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.