07 கோடி ரூபாய் பெறுமதியான நெல் களஞ்சியசாலைகளில் இருந்து மாயம்: இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம்

🕔 October 30, 2023

நெற் சந்தைப்படுத்தும் அதிகாரசபைக்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகளில் இருந்து 07 லட்சம் கிலோ நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குருணாகல் பகுதியில் உள்ள அரசின் 05 நெல் களஞ்சியசாலையிலிருந்து மேற்படி தொகை நெல் காணாமல் போயுள்ளதாக அவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

காணாமல் போயுள்ள நெல் தொகையின் பெறுமதி 650 முதல் 700 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருநாகல் மாவட்டத்தில் உள்ள 05 அரச நெல் களஞ்சியசாலைகளில் நெல் கையிருப்பு காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், உடனடி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

சம்பந்தப்பட்ட நெல் கையிருப்பு காணாமல் போனதில் நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபையின் தலைமை காரியாலய அதிகாரிகளும் சில பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக அமைச்சருக்கு முறைப்பாடு கிடைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்