ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்

🕔 July 19, 2023

ழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று புதன்கிழமை (19) நாடாளுமன்றத்தில் 190 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

ஜூலை 06 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் – இன்று காலை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உட்பட பல தரப்பினர் இந்த சட்டமூலத்தின் உட்பிரிவுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தமை காரணமாக, இந்தச் சட்டமூலம் சர்ச்சைக்குள்ளானது.

இது தொடர்பாக நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்த ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் உட்பிரிவு 28(3), 161 மற்றும் 119 உட்பட மொத்தம் 37 சரத்துகள் கருத்துச் சுதந்திரம், மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றைப் பாதிக்கலாம் எனத் தெரிவித்து சவாலுக்குட்படுத்தியது.

இதற்கிடையில், ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுகளை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் சமர்ப்பித்தது.

இதனையடுத்து சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்றும், எனவே திருத்தங்களுக்குப் பிறகு சட்டமூலம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படுமாயின், மேற்படி முரண்பாடுகள் நிறுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.

தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சட்டமூலத்தின் 8 (3), 136, 141, 142 மற்றும் 156 ஆகிய பிரிவுகளில் மனுதாரர்கள் எழுப்பிய பல கவலைகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். .

பின்னர் ஜூன் 06 ஆம் திகதி நாடாளுமன்ற நடவடிக்கைகளின் ஹன்சார்ட் அறிக்கையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் அச்சிடப்பட்டது.

ஊழலைத் தடுப்பதற்கான சட்டங்களைக் கொண்டுவருவது என்பது இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியை வழங்க – சர்வதேச நாணய நிதியத்தால் வகுக்கப்பட்ட நிபந்தனையாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்