அலி சப்ரியின் கடத்தல் தொடர்பில் நாடாளுமன்றுக்கு சுங்கம் அறிக்கை சமர்ப்பிப்பு

🕔 July 4, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பிலான விரிவான அறிக்கையை இலங்கை சுங்கத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அலிசப்ரி ரஹீம் அண்மையில் சுமார் 80 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கைத் தொலைபேசிகளுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க – சுங்கத் திணைக்களத்தினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை எதிர்வரும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் போது இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் காரணத்தை வெளிப்படுத்துமாறு அலிசப்ரி ரஹீமிடம் சபாநாயகர் கேட்டுள்ளதாகவும், ஆனாலும் நாடாளுமன்ற உறுப்பினர் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் – கடந்த மே மாதம் 23 ஆம் திகதி அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து மொத்தம் 3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைபேசிகளை விமான நிலையத்தில் கடமையாற்றும் சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர்.

இருந்தபோதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் 7.5 மில்லியன் ரூபாவை தண்டமாக செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்