கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி திறந்து வைப்பு
– முனீரா அபூபக்கர் –
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையப் புறப்படும் முனையத்தில் – விமானப் பயணிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான ‘சோ சிலோன் ஓய்வறை வசதி மற்றும் உணவகம் (So Ceylon Cafe & Tea Lounge) நேற்று (11) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
சோ குழுமம் 2020 இல் ஆரம்பமானது. அதன் வணிகங்களில் ஒன்றாக, ‘சோ சாய்’ துபாயில் நடைபெற்ற ‘எக்ஸ்போ 2020’ வர்த்தக கண்காட்சியில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
துபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் இலங்கைத் தேயிலைக்கான அங்கீகாரத்தை சர்வதேச ரீதியில் மிக உயர் மட்டத்துக்கு கொண்டு செல்வதே இந்த வியாபாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
சோ குழுமத்தின் தலைவராக ஷான் அபேவர்தனவும் அதன் பணிப்பாளராக ஷானிகா சுமனதீரவும் கடமையாற்றுகின்றனர்.
எதிர்காலத்தில், உலகம் முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் இதுபோன்ற வசதிகளைத் தொடங்க சோ குழுமம் திட்டமிட்டுள்ளது.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் இலங்கை தனியார் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி, நவலோக குழுமத்தின் தலைவர் உபாலி தர்மதாச ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.