ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது: சபாநாயகர் அறிவிப்பு
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உச்ச நீதிமன்றம் அவதானித்துள்ளதாக – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தினால் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் இதன்போது கூறினார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பமான நிலையிலேயே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் கடந்த ஏப்ரல் 06ஆம் திககதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிலையில், அந்த சட்டமூலத்தினை ஏப்ரல் 27ஆம் திகதி நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நாடாளுமன்றில் சமர்ப்பித்திருந்தார்.
சொத்துகளுடன் தொடர்புடைய லஞ்சம், ஊழல் மோசடி குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கண்டறியவும் விசாரணை செய்யவும் வழக்கு தொடரவும் சுயாதீன ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான சந்தர்ப்பம் இந்த சட்டமூலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்பான செய்தி: ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு