தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமை, எம்.பி பதவியிலிருந்து நீக்கும் பிரேரணையை முன்வைக்க, கட்சித் தலைவர்கள் தீர்மானம்

🕔 May 26, 2023

லி சப்ரி ரஹீமை – நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையை முன்வைக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இன்று (26) கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக, மனோ கணேசன் கூறியுள்ளார்.

அவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்ள சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், எம்.ஏ. சுமந்திரன் மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோர் இது தொடர்பில் சபாநாயகரிடம் மனுவொன்றை ஏற்கனவே கையளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அரசாங்க தரப்பைச் சேர்ந்தவர் என்பதால், அவரை நாடாளுமன்றத்திலிருந்து இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என – நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் – செவ்வாய்கிழமை துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை அடுத்து சபாநாயகரிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அலி சப்ரி ரஹீமிடம் 3.5 கிலோகிராம் எடையுள்ள அறிவிக்கப்படாத தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அதன் மதிப்பு 74 மில்லியன் ரூபாவாகும். மேலும் அவரின் பயணப் பெட்டியிலிருந்து 91 கைத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன. அவற்றின் பெறுமதி 4.2 மில்லியன் ரூபா.

இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினருக்கு 7.5 மில்லியன் அபராதமாக விதிக்கப்பட்டதோடு, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரசுடமையாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்பான செய்தி: தங்கம் கடத்திய அலி சப்ரி எம்.பிக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்