குரங்குகளை ஏற்றுமதி செய்வதைத் தடுக்கும் வழக்கு: 26ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க தீர்மானம்

🕔 May 19, 2023

நாட்டிலிருந்து ஒரு லட்சம் குரங்குகளை சீன நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு – சுற்றாடல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (19) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றில்விடயங்களை முன்வைத்ததுடன், இந்த வழக்கு தொடர்பான விடயங்களை முன்வைக்க திகதியையும் கோரினார்.

அதன்படி, மனுவை வரும் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை வனவிலங்கு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சங்கம், வணக்கத்திற்குரிய மாத்தறை ஆனந்த சாகர தேரர், ஒட்டாரா குணவர்தன மற்றும் ருக்ஷான் ஜயவர்தன உள்ளிட்ட 27 பேரினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சோதனை நோக்கத்திற்காக சீனாவில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு இந்நாட்டின் ஒரு லட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்யத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இது வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, சீனாவுக்கு வனவிலங்குகளை ஏற்றுமதி செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும், வனவிலங்குகள் பணிப்பாளருக்கு உரிமம் வழங்குவதை தடுக்க உத்தரவிடுமாறும் உரிய மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்