கடை உடைத்து 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்கள் திருட்டு: களவுபோனவை அனைத்தும் வலது காலுக்குரியவை

பெரு நாட்டிலுள்ள பாதணிக் கடையொன்றில் புகுந்து – அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்களை திருடிச் சென்ற நபர்கள், அவர்களின் ‘வேலை’யில் தவறிழைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
குறித்த கடையை மூன்று பேர் உடைத்து – அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்களை திருடிச் சென்றுள்ள போதிலும், அந்தச் சப்பாத்துக்கள் அனைத்தும் வலது காலில் அணிபவை என கண்டறியப்பட்டுள்ளது.
களவுபோன சப்பாத்துக்களின் பெறுமதி 10,000 பவுண்ட் (இலங்கைப் பெறுமதியில் 40 லட்சத்து 44 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக தொகை) என கடை உரிமையாளர் கூறியுள்ளார்.
ஆனாலும் அந்த சப்பாத்துக்களை திருடர்கள் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் அங்கிருந்து பாதுகாப்பு கமராக்களில் பதவிவாகியுள்ளது.
நள்ளிரவில் கடை கதவின் பூட்டை உடைத்து, முச்சக்கர வண்டியைப் பயன்படுத்தி வெவ்வேறு வகையான சப்பாத்துக்களைத் திருடர்கள் எடுத்துச் செல்கின்றமை கமராக்களில் பதிவாகியுள்ளது.