அவுஸ்ரேலியாவின் யுனைடட் பெற்றோலியம், இலங்கை சந்தைக்குள் நுழையும் பேச்சுவார்த்தை நிறைவு: அமைச்சர் கஞ்சன
இலங்கையின் எரிபொருள் சில்லறை சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்ரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் நிறுவனத்துடன், இணையவழிப் பேச்சுவார்த்தையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு நிறைவு செய்துள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (28) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எரிபொருள் விற்பனை ஒப்பந்தங்கள், அரசாங்கக் கொள்கைகள், தளவாடங்கள் மற்றும் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் காலக்கெடு குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
யுனைடட் பெற்றோலியம் – தனது நடவடிக்கைகளைத் தொடங்கும் திகதியை அடுத்த வாரத்தில் அறிவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, முதலீட்டுச் சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் ஆகியவற்றின் அதிகாரிகள் மேற்படி கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.