தொல்பொருள் திணைக்கள இலட்சினை தொடர்பில், சுமந்திரன் எம்.பி நாடாளுமன்றில் கடும் விமர்சனம்

🕔 April 25, 2023

தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினை பௌத்த மத அலுவல்கள் அமைச்சின் இலட்சினை போன்று உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று (25) சபையில் தெரிவித்தார்.

தமது கைபேசித் திரையில் – குறித்த இலட்சினையைக் காண்பித்தவாறு கருத்துக்களை வெளிப்படுத்திய அவர்; “தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினை, தர்ம சக்கரத்தையும், தூபியையும் கொண்டுள்ளது” என்றார்.

“இது பார்ப்பதற்கு, பௌத்த மத அலுவல்கள் அமைச்சுக்குரியது போன்றுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையில், எந்த மதம் வெளிப்படுத்தப்படுகிறது? இந்தத் திணைக்களம் எதனைப் பாதுகாக்கிறது என்பதையும், எதனை அழிக்க நினைக்கிறது என்பதையும் இது காட்டுகிறது” எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

அத்துடன், வெடுக்குநாறி மலையில் – மத சின்னங்கள் அழிப்பு தொடர்பான வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணி என்ற வகையில் விடயமொன்றை கூற விரும்புவதாக கூறிய அவர்; “தற்போது அங்குள்ள இந்து மத சின்னங்கள் அழிக்கப்பட்டுள்ளன” என்றார்.

“முன்னதாக, அங்கு வழிபாடுகளை தடுக்கும் முயற்சியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதற்கு எதிராக பல வழக்குகளும் தொடரப்பட்டன. எனினும், அவர்களால் அதனை தடுக்க முடியவில்லை”.

“தற்போது, ஜீப்களில் கட்டை காற்சட்டை அணிந்துவந்த இனந்தெரியாதோரால் மத சின்னங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இதன்போது, குறுக்கிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, அவ்வாறான மத சின்னங்களின் அழிப்புக்கு இந்த அரசாங்கம் இடமளிக்கவில்லை என்றும், இது முற்றிலும் பொய்யான கருத்து என்றும் கூறினார்.

“தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினை, இன்று நேற்றல்ல, பல வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாகும். எனவே, எந்த மதத்துக்கும் நாம் வேறுபாடுகளை காட்ட இடமளிப்பதில்லை” எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

“அப்படியாயின், நீங்கள் அந்த இலட்சினையை மாற்றுவதாக எமக்கு வாக்குறுதி தருகின்றீர்களா?” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதில் கேள்வி தொடுத்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, நாடாளுமன்றில் இது குறித்து பிரேரணை ஒன்றை கொண்டு வருமாறும், அது நியாயமானதாயின் கலந்துரையாடலாம் என்றும் குறிப்பிட்டார்.

பின்னர் மீண்டும் தமது கருத்தை தொடர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஒரு காலத்திற்கு முன்னர் உருவாக்கப்பட்டதால், அது சரியாகாது தானே? என்று வினவினார்.

“இப்போது நான் காண்பித்திருக்கின்றேன். இதனை இப்போது மாற்றுவீர்களா? இது நியாயமானதா? நீங்கள் இதனை நியாயமானது என்று கூறுகின்றீர்களா?” என்று தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, “நீங்கள்தானே இதனை முன்வைக்கிறீர்கள். இது குறித்து கலந்துரையாடுவோம்” என்று குறிப்பிட்டார்.” என்றார்.

தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இலட்சினையை மாற்றக்கூறும் விடயத்தில், நாடாளுமன்றில் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருமாறு, அமைச்சர் மஹிந்த அமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரனுக்கு அழைப்பு விடுத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்