தெற்கு கடலில் 3593 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது: 06 பேர் கைது
ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு ஒன்றினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அதிலிருந்து 3593 மில்லியன் ரூபா பெறுமதியான 179 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பது.
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை கடலோரக் காவல்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் போது இந்த போதைப் பொருள் சிக்கிறது.
08 சாக்குகளில் இருந்த 160 பொதிகளில் சுமார் 179 கிலோ 654 கிராம் (பொதிகள் உட்பட) ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டது.
ஹம்பாந்தோட்ட ‘லிட்டில் பேஸ்’இல் இருந்து 132 கடல் மைல் தொலைவில், உள்ளுர் இழுவை படகிலிருந்து நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (15) இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்திரரக்ஷா’ என்ற கப்பலினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் போதைப் பொருளுடன் இன்று (17) காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்..
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நகுலுகமுவ, குடாவெல்ல, நெடோல்பிட்டிய மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வருடத்தில் இலங்கைக் கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 4908 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.