மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க வேண்டும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்
மின்சார கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இன்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மின் தேவை குறைந்துள்ளமை, டொலரின் மதிப்பு சரிவு, எரிபொருள் மற்றும் நிலக்கரி விலை குறைவடைந்தமை போன்ற விடயங்களை கருத்திற்கொண்டு அதற்கேற்ப மின் கட்டணத்தையும் குறைக்கவேண்டும் என்றார்.
“2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 03 மாதங்களில் மின்சாரத் தேவை 18 சதவீதம் குறைந்துள்ளது.
மின் தேவை குறைவதால், மின் உற்பத்தி மற்றும் வழங்கல் செலவும் குறைகிறது.
எனவே, இந்த வருடத்துக்கான மின்தேவை மின்சார சபையினால் சரியாக மதிப்பிடப்படவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
எனினும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மதிப்பீடு சரியானது.
குறைந்த தேவை இருப்பதால்தான், 35 சதவீத கட்டண உயர்வை பரிந்துரைத்துள்ளோம்.
ஆனால் இந்த நிலைமையை புரிந்து கொள்ளாமல், இலங்கை மின்சார சபை கோரிய 60 சதவீத கட்டண அதிகரிப்புக்கு ஆணைக்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
இலங்கை மின்சார சபையினால் மதிப்பிடப்பட்ட மின்சாரத் தேவைக்கு பதிலாக, தற்போது குறைந்த தேவையே காணப்படுகின்றது. இதனால், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.