ஈஸ்டர் தின தாக்குதல்: புலஸ்தினி தப்புவதற்கு உதவியதாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி அபூபக்கர் பிணையில் விடுவிப்பு

🕔 March 21, 2023

ஸ்டர் தின குண்டுத் தாக்குதலில் ஒரு முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் (ஸாரா ஜஸ்மின்) என்பவர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் பொருட்டு – தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றார் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி மேற்படி பிணை உத்தரவை வழங்கினார்.

புலஸ்தினி மகேந்திரனைப் பற்றிய தகவலைத் தெரிந்தும் அதனை வெளிப்படுத்தாமை மற்றும் அவரை நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், நாகூர்த்தம்பி அபூபக்கர் – பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 13.07.2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் 09 மாதங்கள் தடுப்புக்காவில் வைக்கப்பட்ட நிலையில், 08.04.2021ல் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

தான் செய்யாத குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றமையானது – தனது அடிப்படை உரிமையை மீறியுள்ளதாகக் கூறி, பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் 2021 ஜூன் மாதம் 29ம் திகதி உச்ச நீதிமன்றில் தனது சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமாகிய  ஏ. எல். ஆஸாத் ஊடாக அடிப்படை உரிமை வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் சுமார் 32 மாதங்களாக தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கரை பிணையில் விடுவிக்குமாறு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதபதி என். எம். எம். அப்துல்லாஹ் நேற்று உத்தரவிட்டார்.

அரச சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஸக்கி இஸ்மாயில், குறிப்பட்ட நபருக்கு பிணை வழங்கப்படுவதற்கு எதிராக தனது கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார்.

பொலிஸ் பொறுப்பதிகாரி நாகூர்த்தம்பி அபூபக்கர் சார்பில் மன்றில் தோன்றிய சிரேஷ்ட சட்டத்தரணி என். எம். ஷஹீட், சட்டத்தரணிகளான ஏ.எல்.ஆஸாத், சலாஹுதீன் சப்ரின் மற்றும் பாத்திமா பஸீலா ஆகியோர் செய்த சமர்ப்பணங்களைச் செவியேற்ற நீதிபதி, சந்தேக நபரை பிணையில் செல்ல உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்